அதிமுகவில் ஓங்கும் ஓபிஎஸ் கை... எடப்பாடி அணியில் இருந்து விலகும் மாஜி அமைச்சர்கள்? டெல்லி நெருக்கடி?
சென்னை: அதிமுகவில் புதிய திருப்பமாக திடீரென ஓபிஎஸ் அணியை நோக்கி மாஜி அதிமுக அமைச்சர்கள் செல்ல தொடங்கினர். டெல்லி நெருக்கடியால்தான் மாஜி அமைச்சர்கள் முகாம் மாறுகின்றனர் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
டெல்லி பாஜக மேலிடத்தைப் பொறுத்தவரை சொல்வதை செய்யுமாம் கிளிப்பிள்ளை என்கிற நிலையில் இருப்பவர் ஓ. பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிசாமியோ, டெல்லியையும் கடுமையாக எதிர்க்காமல் அதிமுகவை ஒட்டுமொத்தமாக தன்பக்கம் கொண்டுவருவதில் முனைப்பாக இருக்கிறார்..

டெல்லி பாஜக கணக்கு
எடப்பாடியின் வியூகங்கள், அணுகுமுறைகளால் தங்களுக்கு ஆதாயம் இல்லை என கணக்குப் போடுகிறது பாஜக. இதனால் ஓ.பன்னீர்செல்வம் மூலம் சசிகலாவை அதிமுகவுக்குள் உள்ளே கொண்டு வருவதற்கான நகர்வுகள் படுதீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஓபிஎஸ் தீவிரம்
இதனால்தான் எடப்பாடி பழனிசாமி தரப்பும் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி கொடுத்து ஓ. பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தப் பார்க்கிறது. ஆனால் ஓபிஎஸ்ஸோ நானே அதிமுக; நானே கட்சித் தலைமை என்ற ரீதியில் ஏதோ ஒரு முடிவெடுத்தவராக தீவிரமாக செயல்படுகிறார்.

ஓபிஎஸ் அணியில் மாஜி அமைச்சர்கள்
இந்நிலையில்தான் எடப்பாடி அணியில் இருந்த மாஜி அமைச்சர்கள், இதுவரை எடப்பாடியையே சந்திக்காத முன்னாள் அதிமுக சீனியர்கள் என பலரும் இப்போது தேனி நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஓபிஎஸ் சகோதரர் மறைவுக்கு ஆறுதல் தெரிவிக்கிறோம் என்கிற பெயரில்தான் இந்த சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன.

டெல்லி நெருக்கடி காரணம்?
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக யார் பேசினாலும் முகத்திலேயே அதிருப்தியை காட்டிவிடுகிறாராம் ஓபிஎஸ். இது தொடர்பாக அதிமுகவினரிடம் விசாரித்த போது, டெல்லியைப் பொறுத்தவரை சசிகலா, ஓபிஎஸ் என எல்லோரும் ஒன்றிணையவே விரும்புகிறது. இப்போது இதில் எடப்பாடிதான் முட்டுக்கட்டை போட்டு நிபந்தனைகள் விதிக்கிறார். இதனால் எடப்பாடி இல்லாமலேயே சில நகர்வுகளை டெல்லி பாஜக மேற்கொள்கிறது. இதனால்தான் மாஜி அமைச்சர்களும் ஓபிஎஸ் முகாமுக்கு விசிட் அடிக்கின்றனர் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications