உங்களுக்கு ஒன்னு எங்களுக்கு ஒன்னு! அடம்பிடிக்கும் ஓபிஎஸ்! விட்டு கொடுக்காத இபிஎஸ்! இழுபறியில் அதிமுக
சென்னை : திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதிமுக சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி நீடிப்பதாகவும், இவ்விவகாரத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை காலியாகவிருக்கும் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்கு வரும் ஜூன் 10-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 24ஆம் தேதி தொடங்கி 3ஆம் தேதி முடிவடையும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆளுநருக்கே பாதுகாப்பில்லையா? சட்டசபையில் அதிமுக,பாஜக வெளிநடப்பு! இபிஎஸ் என்ன சொன்னார் தெரியுமா?
ராஜ்யசபா எம்பி வேட்பாளர்
தமிழகத்தை பொறுத்தவரை திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி,டி.கே.எஸ்.இளங்கோவன், கே.ஆர்.என். ராஜேஷ்குமார், அதிமுகவைச் சேர்ந்த ஏ.நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த 6 இடங்களுக்கும் தேர்தல் நடக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும்கிடைக்கும்.
திமுக பட்டியல்
திமுக, தனக்கான 4 இடங்களில் 3 இடங்களுக்கு போட்டியிடுகிறது. ஏற்கெனவே சட்டப்பேரவை தேர்தலில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியுள்ளது. திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார். 3 இடங்களில் திமுக வேட்பாளர்களாக தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் இழுபறி
தற்போது மாநிலங்களவை எம்பிக்களாக உள்ள டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த ஆர்.வைத்திலிங்கம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே அதிமுக சார்பில் இரண்டு இடங்களுக்கு போட்டியிட உள்ள வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. வேட்பாளர் தேர்வு குறித்தும், இறுதி பட்டியல் குறித்தும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இறுதி முடிவு செய்வார்கள் எனவும் கூறப்பட்டது.
கட்சியில் குழப்பம்
இந்த நிலையில் இரண்டு பதவிகளுக்கும் 50க்கும் மேற்பட்டோர் போட்டியிட விருப்பம் தெரிவித்த நிலையில் யாரை வேட்பாளராக தேர்வு செய்வது என்பது குறித்த குழப்பம் அதிமுகவில் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், சிவி சண்முகம், கோகுல இந்திரா, வளர்மதி, செம்மலை, விபிபி பரமசிவம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
நிர்வாகிகள் போர்க்கொடி
அதே நேரத்தில் தங்கள் தரப்பு ஆதரவாளர்களை மாநிலங்களவைக்கு அனுப்ப எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மும்முரம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக மீண்டும் மோதல் வெடித்துள்ள நிலையில் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் வகையில் ஒரு தரப்புக்கு ஒரு பதவி என்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இரு தரப்பிலும் பலம்மிக்க ஆதரவாளர்கள் இருக்கும் நிலையில் அவர்களில் ஒருவருக்குத்தான் இந்த பதவியை வழங்க முடியும் என்பதால் குழப்பம் நீடிக்கிறது.
தொண்டர்களிடையே பரபரப்பு
இதுவரை வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளரை முடிவு செய்து வெளியிட வேண்டும் என மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த இழுபறி காரணமாக அதிமுக தொண்டர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் யார் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.