அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் ஏன்? எடப்பாடி பழனிசாமி சொன்ன காரணம்!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நேற்று, ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் செங்கோட்டையன் பயணித்த நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனத் தெரிந்திருந்தும், அவர்களுடன் சேர்ந்து கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதால் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், "பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் அதிமுக ஆட்சி அமைக்க முடியும்' என இபிஎஸ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். 10 நாள் கெடுவும் விதித்திருந்தார். இதனையடுத்து அவரது கட்சி பதவிகளை பறித்தார் எடப்பாடி பழனிசாமி.

நேற்று நடந்த பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில், ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலர் தினகரன், சசிகலா ஆகியோருடன் செங்கோட்டையனும் கலந்து கொண்டார். அவர்களுடன் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தார். முன்னதாக, ஓபிஎஸ் உடன் காரில் பயணித்தார் அவருடன் திறந்த வேனிலும் ஊர்வலமாகச் சென்றார்.
நேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு, 'என்னை கட்சியை விட்டு நீக்கினால் சந்தோஷம்' என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், "கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் செங்கோட்டையன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கழகத்தில் இருப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனத் தெரிந்திருந்தும், அவர்களுடன் சேர்ந்து கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications