சேது கால்வாய்: ஶ்ரீராமர் கற்பனை என்பதா? இந்து மதத்தை கொச்சைப்படுத்துவதா? பாஜகவைவிட சீறிய அதிமுக!
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் சேது கால்வாய் திட்டம் தொடர்பான தீர்மானத்தின் மீது விவாதம் நடந்த போது, கடவுள் ராமருக்காக தமிழ்நாடு பாஜகவைவிட அதிவேகமாக அதிமுக எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் சீறியபடி பேசினார்.
தமிழ்நாட்டின் 160 ஆண்டுகால கனவு திட்டமான சேது கால்வாய் திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். இந்தத் தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய இடதுசாரி எம்.எல்.ஏ நாகை மாலி, சேது கால்வாய் திட்டத்தை ராமர் பாலம் என்று சொல்லி ராமர் பெயரை சொல்லி ஒன்றிய அரசு கிடப்பில் போட்டுவிட்டது. கட்டுக் கதைகளையும் கற்பனைகளையும் நம்பிக்கைகளையும் சிலர் வரலாறு என சொல்கின்றனர். மக்கள் இதை நம்பவேண்டும் என முயற்சிக்கின்றனர். கட்டுக் கதைகளும் கற்பனைகளும் நம்பிக்கைகளும் வரலாறாகாது. ராமாயணம் ஒரு மகத்தான இலக்கிய படைப்பு. கம்பனின் கவித்திறன் இதில் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் இது ஒரு கற்பனை காவியமாகும். இதை மகாத்மா காந்தி சொல்கிறார். ஜவஹர்லால் நேரு, ராமாயணம் ஒரு கற்பனை காவியமே என்கிறார். ராஜாஜி, ராமாயணம் ஒரு கற்பனை காவியமே என்று சொல்கிறார். வரலாறு வேறு; உண்மை வேறு. நம்பிக்கை வேறு என பேசினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், சேது கால்வாய் திட்டம் தீர்மானம் குறித்துதான் பேச வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு ராமாயணம் ஒரு கற்பனை; மூடநம்பிக்கை என பேசுகின்றனர். ராமரை நாங்கள் தெய்வமாக வழிபடுகிறோம். ராமர் பாலம் கட்டினாரா என்பது வேறு விஷயம். ஆனால் ராமாயணம், ராமரை கற்பனை, மூடநம்பிக்கை என பேசியவற்றை சபை குறிப்பில் இடம்பெறக் கூடாது என்றார். அப்போது சபாநாயகர் அப்பாவு குறுக்கிட நயினார் நாகேந்திரன், சேது கால்வாய் திட்டம் தீர்மானத்தை ஆதரிப்பதாக கூறி அமர்ந்தார்.
பின்னர் அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில் மீண்டும் ராமர் விவகாரத்தை கையில் எடுத்தார். பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், சில பேர் யாரையோ திருப்திபடுத்துவதற்காக, உலகத்தின் 100 கோடிக்கும் மேல் மக்கள் பின்பற்றுகிற இந்து மதத்தைக் கொச்சைப்படுத்துகிற வகையில் (இதை சபாநாயகர் சபை குறிப்பில் இருந்து நீக்குவதாக கூறினார்), ராமர் என்கிற கதாபாத்திரம் கற்பனையானது என இந்த சபையில் பதிவாகி இருப்பது எங்களது மனதை புண்படுத்துவதாக இருக்கிறது. சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். 100 கோடிக்கும் மேல் மக்கள் பின்பற்றுகிற ஒரு மதத்தின் நாயகன் ராமர். ஒருநாளைக்கு ஆயிரம் முறை ராமா ராமா என உச்சரிக்கிறோம். ராமர் ஒரு கதாபாத்திரம் என சொல்வதற்கு இது என்ன சினிமாவா? ராமர் ஒரு அவதாரப் புருஷர். ஆகையால் ராமர் கற்பனை பாத்திரம் என்பதை சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார். கடவுள் ராமருக்காக பாஜகவைவிட அதிமுக வரிந்து கட்டிப் பேசியிருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. பின்னர் தமிழ்நாடு சட்டசபையில் சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.












Click it and Unblock the Notifications