அண்ணாமலை அந்த வார்த்தையை வாபஸ் வாங்கலைன்னா மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.. கொதித்து எழுந்த அதிமுக!
சென்னை: எடப்பாடி பழனிசாமியை நம்பிக்கை துரோகி என கூறியதை வாபஸ் பெறாவிட்டால் அண்ணாமலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் தன்னால்தான் பாஜக வளர்ந்துள்ளது என்பதை போன்ற பிம்பத்தை உருவாக்கி உள்ளதாகவும், அரசியல் தலைவர்கள் குறித்து தொடர்ந்து பொய் தகவல்களை பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து அண்ணாமலை கூறிய கருத்துக்கும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு காட்டமாக பதில் அளித்திருந்தார் அண்ணாமலை. விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, பிரதமர் மோடியின் முதுகில் குத்தியவர் எடப்பாடி பழனிசாமி, நம்பிக்கை துரோகி என்ற பெயர் அவருக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பதிலடி கொடுத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அண்ணாமலை போன்றவர்களால் தான் தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பாஜக தோல்வி அடைந்துள்ளது. மத்தியில் மைனாரிட்டி அரசாக பாஜக ஆட்சி அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசியுள்ள ஆர்பி உதயகுமார், “பாஜக வளர்ந்ததாக வார்த்தை ஜாலம் காட்டுகிறார் அண்ணாமலை. வெற்று விளம்பரங்களை செய்து களத்தில் தன்னை முன்னிலைப்படுத்த அண்ணாமலை பேராசைப்படுகிறார். அண்ணாமலை போன்ற தகுதி அனுபவம் இல்லாத அரைவேக்காடு தலைவர்களால் தான் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அண்ணாமலை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு உள்நோக்கம் கொண்டு எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கிறார். அதிமுக அடித்தளத்தை அசைத்து பார்க்கும் வேலையில் அண்ணாமலை ஈடுபட்டார். தமிழ்நாட்டுக்காக பேரிடர் நிவாரண நிதியை கூட பெற்றுத்தர முடியாதவர் அண்ணாமலை. மெட்ரோ ரயில் 2-வது கட்ட திட்டத்துக்காக ஒன்றிய அரசிடம் இருந்து அண்ணாமலை நிதியை பெற்றுத் தந்தாரா?
தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை நாகரிகமற்ற அரசியல் பண்பாட்டை தமிழ்நாட்டில் விதைத்து வருகிறார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அண்ணாமலை தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். இது போன்ற குற்றச்சாட்டால் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் சேவையை யாரும் மறந்துவிட முடியாது.
அண்ணாமலையின் சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது. அதிமுக பற்றி அண்ணாமலை பேசுவது, ஆடு நனைவதற்கு ஓநாய் கவலைப்படுவது போல உள்ளது. பழனிசாமி நம்பிக்கை துரோகி என்ற வார்த்தையை அண்ணாமலை வாபஸ் பெறவேண்டும், இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும். அதிமுக தொண்டர்கள் கொதித்து எழுந்தால் அண்ணாமலை என்ன விளைவுகளை எதிர்கொள்வார் எனத் தெரியாது” என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார் ஆர்பி உதயகுமார்.












Click it and Unblock the Notifications