அடுத்து நம்ம ஆட்சிதான்.. தொண்டர்களிடம் சொன்ன எடப்பாடி பழனிசாமி.. எம்ஜிஆர் சிலைக்கு இன்று மரியாதை
சென்னை: அதிமுக நிறுவனத்தலைவர் எம்ஜிஆரின் 108-வது பிறந்த நாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். அத்துடன், எம்ஜிஆரின் 108ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தொண்டர்களுக்கு மிக நீண்ட கடிதம் ஒன்றையும் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ளார்.
அதிமுக தலைமைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- "அதிமுக நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாளான இன்று 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி,கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்க உள்ளார்.

உருவப்படம்: அதனைத்தொடர்ந்து, தலைமைக் கழக செயலாளர்கள் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்தும், ஆங்காங்கே அவரது உருவப்படத்தை வைத்தும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோல், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் எம்.ஜி.ஆர். சிலைகள், படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி: முன்னதாக, நேற்றைய தினம் எம்ஜிஆரின் 108ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தொண்டர்களுக்கு மிக நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், "புரட்சித் தலைவர், புரட்சித் தலைவியின் பொற்கால ஆட்சியை தமிழ் நாட்டில் மீண்டும் மலரச் செய்யும் மாபெரும் மக்கள் பணியில் நாம் அனைவரும் முழு மனதோடு ஈடுபட இந்நாளில் உளமார உறுதியேற்போம். ஜனநாயகத்தை சீர்குலைக்க, நம் அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்குகின்ற கடமையும், பொறுப்பும், நம் அனைவர் முன்பும் இருக்கின்றது.
பணிகள்: அந்தப் பயணத்தில் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருடைய உழைப்பும், ஆர்வமும் மிகவும் இன்றியமையாததாகும். உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் என்றென்றும் நான் உறுதுணையாக இருப்பேன். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்; வெற்றிவாகை சூடுவோம். ஆர்வத்தோடு தொண்டாற்றுவோம், புரட்சித் தலைவர், புரட்சித் தலைவியின் நல்லாட்சியை மலரச் செய்வது, நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை நினைவில் கொண்டு பணியாற்றுவோம்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications