சென்னையில் புதுசா திறந்த ஹோட்டல்.. மாமூல் கேட்டு மிரட்டிய அதிமுக நிர்வாகி ஐஸ்ஹவுஸ் மூர்த்தி கைது!
சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்ட ஹோட்டலில் மாமூல் கேட்டு மிரட்டிய அதிமுக வட்டச் செயலாளர் ஐஸ்ஹவுஸ் மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிதாக ஹோட்டல் திறந்தவர்களிடம் தன்னை மீறி இந்த ஏரியாமல் கடை நடத்த முடியாது எனக் கூறி மிரட்டியதுடன், இரண்டு பேரை கடைக்கு அனுப்பி பிரச்சனை செய்ய வைத்துள்ளதாக கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அதிமுக வட்டச் செயலாளர் ஐஸ்ஹவுஸ் மூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். மாற்றுத்திறனாளியான இவர் திருவல்லிக்கேணி பகுதியில் ஹோட்டல் ஒன்றை தொடங்கி உள்ளார். கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி இரவு அந்த ஹோட்டலுக்கு வந்த நபர் ஒருவர் அவரிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. தான் இந்த ஏரியாவின் அதிமுக வட்டச் செயலாளர் என்றும், தனக்கு மாமூல் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
மேலும், இந்த பகுதியில் ஓட்டல் திறந்துள்ளீர்கள்.. ஏன் என்னைக் கூப்பிடவில்லை.. என கேள்வி எழுப்பி வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார். தினமும் தனக்கு மாமூல் தொகை தர வேண்டும் அல்லது மாதத்திற்கு ஒரே தவணையாக மாமூல் கொடுக்க வேண்டும் என மிரட்டல் விட்டுள்ளார். ஆனால் அதற்கு அப்துல் ரகுமான், மாமூல் தர முடியாது எனக் கூறியுள்ளார்.
பின்னர் அந்த நபர் அங்கிருந்து சென்ற நிலையில், அவர் தரப்பில் இருந்து வேறு ஒரு நபர் வந்து கடையில் மிரட்டல் விடுத்துவிட்டுச் சென்றுள்ளார். மாமூல் தரவில்லை என்றால் இந்த ஏரியாவில் கடை நடத்த முடியாது என மிரட்டி உள்ளார். அதன் பிறகு மற்றொரு நபரும் வந்து மிரட்டி உள்ளார்.
இதையடுத்து, அப்துல் ரகுமான் தரப்பில் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அதிமுக வட்டச் செயலாளரான ஐஸ் ஹவுஸ் மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது ஆபாசமாக பேசுதல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications