நீட் விலக்கு: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்தது அதிமுக - விஜயபாஸ்கர்
மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அதிமுக கொண்டு வந்தது என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை: யாருமே கேட்காத நிலையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டசபையில் தெரிவித்தார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது அதிமுக அரசுதான் என்று தெரிவித்தார்.
Recommended Video
2005ஆம் ஆண்டில் நுழைவுத் தேர்வு வேண்டாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தது ஜெயலலிதா என்று விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அதிமுக விஜயபாஸ்கர் கருத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுப்பு தெரிவித்தார். நுழைவுத்தேர்வு வேண்டாம் என்று சட்டம் கொண்டு வந்தது திமுகதான் என்று தெரிவித்தார். ஆதாரம் இல்லாமல் பேச வேண்டாம் என்று தெரிவித்தார்.
உயர்கல்வித்துறையில் நுழைவு தேர்வு வேண்டாம் என்று கொண்டு வந்தார் ஜெயலலிதா என்று ஆதாரம் உள்ளதாகவும் கூறினார் விஜயபாஸ்கர்.
1984ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வு நடைபெற்றதாக கூறினார் விஜயபாஸ்கர். அப்போது யாருடைய ஆட்சி நடைபெற்றது என்று அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.
நீட் எதிர்ப்பு கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார். மசோதாவை ஆதரிப்பதாகவும் கூறினார்.
நீட் நுழைவுத் தேர்வை முதன் முதலில் கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சிதான் என்றும் விஜயபாஸ்கர் ஆணித்தரமாக தெரிவித்தார். நுழைவுத் தேர்வு குறித்து அதிமுக திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒருமனதாக ஆதரவு தர வேண்டும் அதை விடுத்து வேறு எதுவும் பேச வேண்டாம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். உங்கள் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குடியரசுத்தலைவர் திருப்பி அனுப்பியதாகவும் கூறினார்.
இதனையடுத்து பேச எழுந்த விஜயபாஸ்கர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நீட் வந்தது என்று கூறி சர்ச்சைக்குரிய வார்த்தையை கூற அதற்கு காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சர்ச்சைக்குரிய வார்த்தையை சபாநாயகர் அப்பாவு நீக்கினார்.
இதனையடுத்து நீட் என்ற வார்த்தை எப்போது நுழைந்தது என்று சட்டசபையில் சட்டசபை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார். அதற்கு செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு மதிப்பளிக்கும் வகையில் அனைவரும் அமர வேண்டும் என்று சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.
எதிர்கட்சித்தலைவர் பேசும் போது யாரும் குறுக்கிட வேண்டாம் என்று கூறிய சபாநாயகர் ஆளுநர் திருப்பி அனுப்பியது பற்றி மட்டும் பேசுங்கள், நீட் தேர்வை யார் கொண்டு வந்தார்கள் என்பது பற்றி பேச வேண்டாம் என்றும் தெரிவித்தார். இதனையடுத்து விஜயபாஸ்கர் பேசியது அவைக்குறிப்பில்தான் இருக்கும் என்றும் சபாநாயர் தெரிவித்தார்.
டாக்டர் போதும் நல்லா பேசுறீங்க, நிறைவா ஆளுநர் உரையைப்பற்றி பேசி முடிங்க என்று துரைமுருகன் விஜயபாஸ்கரைப் பார்த்து பேசினார். இதனையடுத்து பேசிய விஜயபாஸ்கர். நீட் தேர்வை அதிமுக எதிர்க்கும் என்றும் நீட் விலக்கு மசோதாவிற்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறினார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை பற்றி விளக்கமாக சட்டசபையில் பேசினார் விஜயபாஸ்கர். சட்ட நுணுக்கத்தோடு இது அணுக வேண்டிய விசயம் என்பதால் மிக கவனமாக மிக நுணுக்கமாக அணுக வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. இதை அரசியல் ஆக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார் விஜயபாஸ்கர்.












Click it and Unblock the Notifications