அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா எனும் விதி அதிரடி ரத்து- அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிமுகவினரால் வழங்கப்பட்ட நிரந்தர பொதுச்செயலாளர் பதவியை அதிமுக பொதுக்குழு இன்று அதிரடியாக ரத்து செய்துள்ளது.
Recommended Video
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடத்த தடை கோரினார் அதிமுக ஒருங்கிணைப்பாளர், பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம், பொதுக்குழுவை நடத்த அனுமதித்து ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் 5 ஆண்டுகாலம் இருந்து வந்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டன. இதற்குப் பதிலாக பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதாவுக்கு நிரந்தரப் பொதுச்செயலாளர் என வழங்கப்பட்டிருந்த விதியும் இன்றைய பொதுக்குழுவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஜெயலலிதாவே பொதுச்செயலாளராக இருந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார் . பின்னர் சசிகலா நீக்கப்பட்டு அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா; ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் என அதிமுக விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டன.
இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி; துணைப் பொதுச்செயலாளராக கேபி முனுசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். புதிய பொதுச்செயலாளர் தேர்தல் 4 மாதங்களில் நடைபெற உள்ளது.
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர் 10 ஆண்டுகள் கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும்; தலைமைக் கழக பொறுப்புகளில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்; குறைந்தது 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிதல், 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிதல் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications