ஜூலை11 அதிமுக பொதுக்குழு செல்லாது சென்னை ஹைகோர்ட் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு
சென்னை: அதிமுகவின் ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்புக்கு எதிராக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
Recommended Video
சென்னையில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அக்கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கம் செய்தும் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
இஅதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து வழக்கு தொடர்ந்திருந்தனர். முதலில் அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என தீர்ப்பு கூறினார். மேலும், ஜூன் 23- ஆம் தேதிக்கு முன்னர், எந்தநிலை இருந்ததோ, அதேநிலை நீடிக்கும் என உத்தரவிட்டார். கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தார். இது அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த தீர்ப்பை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடியது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு. அத்துடன் அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பு, எடப்பாடி பழனிசாமி கோஷ்டிக்கு அழைப்பு விடுத்தது. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் இந்த அழைப்பை விடுத்திருந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி, நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் கொண்ட அமர்வில் முறையீடு செய்தார். தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய இருக்கிறோம். அந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றார். அதற்கு நீதிபதிகள், மனு தாக்கல் செய்து விசாரணைக்கு பட்டியலிட்டால், வரும் திங்களன்று விசாரிப்பதாக தெரிவித்தனர்.
நான்தான் ஒருங்கிணைப்பாளர்.. எனக்குதான் அதிமுக தலைமை அலுவலக அதிகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் ஓபிஎஸ்