பாஜக மேலிடம் அழைப்பா? டெல்லி பறக்கும் எடப்பாடி.. அமித்ஷாவுடன் பேசப்போவது என்ன
சென்னை: கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்துள்ளார். செங்கோட்டையன் விதித்த கெடு நாளையுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக மேலிடம் அழைப்பின் பேரில் எடப்பாடி பழனிசாமி செல்ல உள்ளதாகவும் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள சிபி ராதாகிருஷ்ணனையும் எடப்பாடி பழனிசாமி மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் மோதல்?
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான செங்கோட்டையன் கடந்த வாரம் மனம் திறந்தார். கோபிசெட்டிபாளையத்தில் கடந்த 5ஆம் தேதி அளித்த பேட்டியில், இந்த தகவலை வெளியிட்டு, கட்சியை ஒருங்கிணைக்கும் பணியை 10 நாட்களுக்குள் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள வேண்டும் என்று கெடு விதித்தார்.
செங்கோட்டையன் கெடு விதித்த மறுநாளே அவரது கட்சி பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டினார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையேயான மோதல் அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி சென்ற செங்கோட்டையன்
இந்த சூட்டோடு சூடாக ஹரித்வாருக்கு மன அமைதிக்காக செல்வதாக கூறிவிட்டு சென்ற செங்கோட்டையன், திடீரென டெல்லி சென்றார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாக கூறினார். எனினும், இந்த சந்திப்பு தொடர்பாக பாஜக தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை.
செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு நாளையுடன் முடிவடையும் நிலையில் அதிமுகவில் மீண்டும் கலகம் ஏற்படலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. செங்கோட்டையனை சந்திப்பேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
அமித்ஷாவை சந்திக்கிறார் எடப்பாடி
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர் செல்வம் விலகியுள்ள நிலையில், டிடிவி தினகரனும் விலகியுள்ளார். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறி வருகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு பதில் வேறு யாரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினாலும் ஏற்க தயார் என்று நிபந்தனை விதித்துள்ளார். இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் டெல்லி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாகவும் பாஜக மேலிடம் அழைப்பின் பேரில் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதாகவும் சொல்லப்படுகிறது. அதிமுக இணைப்பு தொடர்பான பேச்சு அதிகரித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கூட்டணியில் யார் யார்?
அதேபோல, அதிமுக - பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாலும் இதுவரை சொல்லிக்கொள்ளும்படி பெரிய கட்சி எதுவும் இணையவில்லை. தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இன்னும் முடிவை தெளிவாக அறிவிக்கவில்லை.
எனவே, கூட்டணி தொடர்பாகவும் அமித்ஷாவுடனான சந்திப்பின்போது பேசப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பான சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல இருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications