தெற்கே தேய்ந்த அதிமுக.. ஓட்டு வங்கியில் பெரிய ஓட்டை போட்ட டிடிவி தினகரன்.. முந்திய திமுக!
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி ஒரு வகையில் தனது அரசியல் அஜெண்டாவில் வெற்றி பெற்று விட்டது என்று சொல்லலாம். திட்டமிட்டபடியே தென்மண்டலத்தில் அதிமுக அதிக வாக்குகளைப் பெற முடியாமல் போவதற்கு அந்த கட்சி ஒரு முக்கியமான காரணமாக இருந்துள்ளது.
அதிமுகவை எம்ஜிஆர் துவங்கிய காலகட்டம் முதல், மேற்கு மண்டலம் மட்டுமல்லாது, தென்மண்டலம் அதிமுகவுக்கு அமோக ஆதரவு கொடுத்து வந்துள்ளது.
இந்த மண்டலத்தில் எம்ஜிஆருக்கு மிக அதிக ஆதரவு வட்டம் உண்டு. அவரது மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவுக்கும் தென்மண்டலம் ஆதரவு அளித்து வந்துள்ளது.

முக்குலத்தோர் ஓட்டு
தேனி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெருவாரியாக உள்ள முக்குலத்தோர் அதிமுகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்துள்ளனர். தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிமுகவுக்கு எப்போதுமே மிகப்பெரிய பலமாக இருந்து வந்தது. ஜெயலலிதாவுடன் சசிகலா இணைந்து இருந்தது இதற்கு மற்றொரு முக்கிய காரணம்.

கூட்டணி
ஆனால் இந்த தேர்தலில் அந்த வாக்கு வங்கியில் பெரிய ஓட்டை போட்டு விட்டார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். தேமுதிக, அசாதுதீன் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.

தென் மாவட்டங்கள் ஃபோகஸ்
அதேநேரம் ஒரு விஷயத்தில் தினகரன் ரொம்ப தெளிவாக இருந்தார். தென் மாவட்டங்களில் அதிக அளவுக்கு தனது கட்சி போட்டியிடும் வகையில் தொகுதி பங்கீடு செய்யப்பட்டது. வடக்கு மாவட்டங்களில் அதிக தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டன. தாங்கள் வடக்கு மாவட்டத்தில் பலமாக இருப்பதாக தேமுதிக நம்பியதால் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது.

தினகரனே போட்டி
தென் மாவட்டமான தூத்துக்குடியில் உள்ள கோவில்பட்டி தொகுதியில் சாட்சாத் தினகரன் போட்டியிட்டார். ஆனால் அமமுக எந்த ஒரு தொகுதியிலும் ஜெயிக்கவில்லை என்ற போதிலும் கூட 2.47 சதவீத வாக்குகளைப் பெற்று 7வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. அதாவது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை விடவும் அதிக வாக்குகளை வாங்கியுள்ளது.

அமைச்சர்கள் தோல்வி
வழக்கமாக, அதிமுகவுக்கு செல்லும் முக்குலத்தோர் வாக்குகளை தினகரன் கட்சி பிரித்துள்ளது. இதன் காரணமாகத்தான் ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சங்கரன்கோவில் தொகுதியில் அமைச்சர் ராஜலட்சுமி உள்ளிட்ட அமைச்சர்கள் தென் மண்டலத்தில் தோல்வியை தழுவியுள்ளனர்.

வாக்கு வங்கி
அந்த வகையில் தென் மண்டலத்தில் அதிமுக 36.4 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. அதேநேரம் திமுக 41.1 8% வாக்குகள் பெற்றுள்ளது. ஒரு காலத்தில் அதிமுக கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட தென்மாவட்டத்தில் அந்த கட்சியை திமுக முந்துவதற்கு தினகரன் கட்சி ஒரு வகையில் உதவி செய்து விட்டது என்று தான் கூற வேண்டும்.












Click it and Unblock the Notifications