பேரறிவாளன் விடுதலைக்கு மொத்த உரிமை அதிமுகவுக்கே- எங்க சட்டஞானம் அப்படிப்பட்டது- ஓபிஎஸ்-ஈபிஎஸ்
சென்னை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யபப்ட்டுள்ளது அதிமுகவின் சட்ட ஞானத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன், இன்று உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். பேரறிவாளன் விடுதலையை ஒட்டுமொத்த தமிழகமும் கொண்டாடி வருகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு; வரலாற்றில் இடம்பெறக்கூடிய தீர்ப்பு என குறிப்பிட்டுள்ளார். பேரறிவாளன் விடுதலையை வரவேற்று பட்டாசுகள் வெடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றன.
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளன் இன்று விடுதலை செய்திருப்பது அதிமுகவுக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும், நிம்மதியையும் தருகிறது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் விடுதலை செய்ய வேண்டும். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற 6 பேருக்கும் நீதி வழங்க வேண்டும் என்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகள், எடுத்து வைத்த சட்ட நுணுக்கங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநில அமைச்சரவையின் தீர்மானத்தின்படி பேரறிவாளனையும் அவரோடு இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் மற்ற 6 பேர்களையும் எனது தலைமையிலான அரசு விடுதலை செய்யும் என்று 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்ததை நன்றியோடு நினைவு கூறுகின்றோம்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஜெயலலிதாவும் 2018-ல் அதிமுக அரசும் துணிச்சலாக அறிவித்தது. அதிமுக ஆட்சிக் கால அமைச்சரவை முடிவுதான் இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அடித்தளம். இது முழுமையாக அதிமுகவுக்கு கிடைத்தவெற்றிதான்.
பேரறிவாளனை விடுவிக்குமாறு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், அவரை உடனே விடுதலை செய்யவும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எஞ்சிய 6 பேரை உடனடியாக விடுதலை செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications