பங்காளி சொல்லிட்டாரு.. "அதிமுக தனித்து நிற்க ரெடி".. எடப்பாடி கிட்ட பேசுறேன்.. செல்லூர் ராஜூ பளிச்!
சென்னை : திமுக தனித்து நின்றால் அதிமுகவும் தனித்து நிற்க தயார் என்றும், தனித்து நிற்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் கேட்க உள்ளேன் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
எல்லா கட்சிகளும் தனித்து நின்றால் தான் யாருக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என தெரியும் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் 50வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவையொட்டி ஒவ்வொரு வார்டுகளிலும் ஒலிபெருக்கி மூலம் அதிமுக கொள்கைப் பாடல்களை ஒலிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

எடப்பாடி வித்தியாசமானவர்
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "இன்று எந்த இயக்கத்திலும் மக்களை வசீகரிக்கக்கூடிய, வலிமையான தலைவர் இல்லை. அதிலும் எங்கள் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வித்தியாசமானவர். அதிமுகவில் தற்போது வலிமையான தலைவர் இல்லை என சொல்லும் ஸ்டாலின், அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என ஆரூடம் சொன்னார். ஆனால், எடப்பாடி ஆட்சி நான்கரை ஆண்டுகள் நீடித்தது. எனவே அதிமுகவை வழிநடத்தும் வலிமையான தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். கொடுமையான காலங்களிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார்.

அதிமுக எதிர்க்கும்
இந்தி திணிப்பு விவகாரத்தில் முதலமைச்சரின் செயல்பாட்டை வரவேற்கிறோம். தமிழகத்தில் எப்போதும் இருமொழிக் கொள்கை தான் இருக்க வேண்டும். இந்தி திணிப்பை அதிமுகவும் எதிர்க்கிறது. மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்கக்கூடாது. மொழியைத் திணிக்க யார் முயற்சித்தாலும் அதிமுக எதிர்க்கும்.

பேஸ்மட்டம் வீக்
திமுகவுக்கு தான் பில்டிங் ஸ்ட்ராங். பேஸ்மட்டம் வீக்காக உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினை பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. எந்த முதலமைச்சரும் இவ்வளவு மனம் வெதும்பி பேசியதாக வரலாறு இல்லை. முதலமைச்சரே இப்படி பேசியதைப் பார்த்து வருத்தமாக இருக்கிறது. முதல்வரே இப்படி பேசினால் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எல்லாம் என்ன செய்வார்கள்?

என் பதவியையே பறித்தார்
ஜெயலலிதா ஆட்சியில் அதிகாரி முதல் அரசியல்வாதி வரை யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார். நான் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது லஞ்சம் வாங்கியதாக ஜெயலலிதாவிடம் புகார் சென்ற போது என்னை உடனடியாக விசாரித்து, என்னுடைய மாவட்ட செயலாளர் பதவியை பறித்தார். அதுபோல முதலமைச்சர் ஸ்டாலின் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் இப்படி பேசியது திடமான தலைமைக்கு அழகல்ல.

தனித்து நிற்கத் தயார்
நாடாளுமன்ற தேர்தலில் திமுக 4 தொகுதிகளில் கூட வெல்வது சந்தேகமே. 40க்கு எங்கு செல்வது? திமுக தனித்து நிற்கப் போவதாக பங்காளி கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சொல்கிறார். அது போல் ஏன் அதிமுகவும் தனித்து நிற்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுக்க உள்ளேன். எல்லா கட்சிகளுமே தனித்து நிற்கட்டும். மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள், யாருக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என தெரிந்து கொள்ள அது வசதியாக இருக்கும். திமுக தனித்து நின்றால் அதிமுகவும் தனித்து நிற்க தயார்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications