ராணிப்பேட்டை ஜமாத் நடவடிக்கை... அதிர்ச்சியில் உறைந்த அதிமுக தலைமை
சென்னை: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ராஜ்யசபாவில் ஆதரித்த காரணத்திற்காக ஜமாத் காப்பாளர் பொறுப்பிலிருந்து அதிமுக எம்.பி. முகமது ஜான் நீக்கப்பட்டது அதிமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஆளுங்கட்சி எம்.பி. ஒருவரை ஜமாத் பொறுப்பில் இருந்து இப்படி அதிரடியாக நீக்குவார்கள் என அதிமுக தலைமை உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
மேலும், கடந்த சில நாட்களாக அதிமுகவில் இருந்து பல இஸ்லாமியர்கள் வெளியேறியதாக வரும் செய்தியும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.க்கு பெரும் குடைச்சலை கொடுக்கிறது.

அதிமுக ஆதரவு
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அதிமுக ராஜ்யசபா எம்.பி.க்கள் 11 பேரும் ஆதரித்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஈழத்தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் குடியுரிமை விவகாரம் என்பதால் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடந்த ஒரு வார காலமாக போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

நீக்கம்
இந்நிலையில், ராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிவாசல் முத்தவல்லிகளுக்கெல்லாம் தலைமையாக, அதாவது காப்பாளராக இருந்த முகமது ஜானை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளனர் ஜமாத் நிர்வாகிகள். இது அதிமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்தளவிற்கு எதிர்ப்பு உருவாகும் என அதிமுக எதிர்பார்க்கவில்லை.

விலகல்
மேலும், அதிமுகவில் உள்ள இஸ்லாமிய பிரமுகர்கள் சிலர் இந்த விவகாரத்தில் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருக்கின்றனர். இதனிடையே கடையநல்லூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நைனார் முகமது கட்சியிலிருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.க்கு பெரும் குடைச்சலை தருகிறது.

முதல்முறை
குடியுரிமை சட்டத்திருத்தம் விவகாரத்தில் நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகமாவதால் அது குறித்து முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவில் உள்ளவர்களுக்கு இதனால் பாதிப்பில்லை என்றும், ஏற்கனவே பிரதமர் இது குறித்து விளக்கி விட்டார் எனவும் முடித்துக்கொண்டார்.












Click it and Unblock the Notifications