செல்லப்பா சொல்வது நடக்கும்.. செல்லூர் ராஜுவின் சட்டைப் பையை கவனிச்சீங்களா.. புகழேந்தி மகிழ்ச்சி
சென்னை: அதிமுகவில் ஒரே தலைமை என்ற ராஜன் செல்லப்பாவின் கருத்தை வரவேற்பதாகவும், கூடிய விரைவில் சசிகலா தலைமையின் கீழ் அனைவரும் இணைந்து செயல்படுவார்கள் என்றும் அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் சசிகலா குடுமபத்துக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்ட போது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் ஓரம் கட்டப்பட்டனர்.
இப்போது ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைந்து கட்சியையும் ஆட்சியையும் நடத்திவருகின்றனர். ஒபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளனர். எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் இருவரும் சேர்ந்துதான் எடுக்க வேண்டும் என விதிகளை அதிமுக செயற்குழு திருத்தி உள்ளது.
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை... ராஜன் செல்லப்பா கலக குரலுக்கு குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ஆதரவு!
அதிமுகவில் மோதல்
இதனால் வேட்பாளர் தேர்வு, நிர்வாகிகள் நியமனம் உள்பட ஒவ்வொரு முடிவிலுமே ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்படுகிறது. இதனால் அதிமுகவில் உள்கட்சி பூசலும் தற்போது வெடித்துள்ளது.
வெடித்த செல்லப்பா
மதுரை புறநகர் மாவட்ட செயலாளருமான மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான ராஜன் செல்லப்பா அதிமுகவில் இரட்டை தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். இடைத்தேர்தல் தோல்வி, லோக்சபா தேர்தல் தோல்விக்கு இரட்டை தலைமை தான் காரணம் என்று ராஜன் செல்லப்பா கூறினார்.
பொதுச்செயலாளர்
அதிமுகவினர் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ஒபிஎஸ் மற்றும் எடப்பாடி அணிகள் முழுமையாக இணையவில்லை என்றும், எனவே ஒற்றைத்தலைமை அவசியம் என்றும் கூறினார்.
சசிகலா தலைமை ஏற்பார்
இதுகுறித்து அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறுகையில், "அதிமுக ஒரே தலைமையின் கீழ் தான் செயல்பட வேண்டும் என்பதையே நாங்களும் வலியுறுத்துகிறோம். ராஜன் செல்லப்பா சொல்வது நிச்சயமாக நடக்கும். ராஜன் செல்லப்பா சொல்வதைத்தான் நாங்களும் வெளியில் இருந்து சொல்லி வருகிறோம். செல்லூர் ராஜு கூட சசிகலாவின் படத்தை சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு இருக்கிறார். அவர் கூறிபடி அதிமுகிவிற்கு ஒரே தலைவர் என்ற கருத்து வரவேற்கத்தக்கது. அது ஒரு நாள் நடக்கும்.அதிமுகவினர் இன்னும் நன்றி விசுவாசத்துடன் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கூடிய விரைவில் சசிகலா தலைமையின் கீழ் செயல்பட அனைவரும் வருவார்கள்" என்றார்.