புது தலைவலி.. செங்கல்பட்டு உட்பட பல தொகுதிகள்.. வேட்பாளரை மாற்றக்கோரி.. அதிமுகவினர் தொடர் போராட்டம்
சென்னை: ஒரு பக்கம், அமமுகவில் இணைந்த எம்.எல்.ஏ. ராஜவர்மன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார், இன்னொரு பக்கம், செங்கல்பட்டு, ஏற்காடு உள்ளிட்ட சில தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட, அதிமுக வேட்பாளர்களை மாற்றக்கோரி அக்கட்சியின் ஒரு பிரிவினர் போராட்டங்கள் நடத்தினர்.
சாத்தூர் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் ராஜவர்மன். நேற்று அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானபோது, அவருக்கு டிக்கெட் வழங்கவில்லை. எனவே, அவர் இதற்கு காரணம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான் என்று குற்றம்சாட்டினார்.
இதையடுத்து அவர் அமமுகவில் இன்று இணைந்தார். இதையடுத்து அவரை அதிமுகவிலிருந்து நீக்கி தலைமை உத்தரவிட்டுள்ளது.

கட்சியிலிருந்து நீக்கம்
கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், விருதுநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த
திரு. M.S.R. ராஜவர்மன், M.L.A. (சாத்தூர் சட்டமன்றத் தொகுதி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்காடு வேட்பாளர்
இதனிடையே, ஏற்காட்டில் சிட்டிங் எம்எல்ஏ சித்ரா குணசேகரன் மீண்டும் போட்டியிட அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர். சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற உறுப்பினராக தற்போது பதவி வகிப்பவர் சித்ரா குணசேகரன். மீண்டும் அதிமுக சார்பில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக தலைமை கழகம் மீண்டும் அவரின் பெயரையே அறிவித்துள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்காடு பேருந்து நிலையம் முன்பு அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரிகள்
ஏற்காடு தனி தொகுதியாக உள்ளதால் அதுவும் பழங்குடியினர் தொகுதியாக உள்ளது. ஏற்கனவே கடந்த காலங்களில் ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா குணசேகரன் ஏற்காடு பகுதி மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை எனவும், கடந்த தேர்தலில் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு தனியாக அரசு கலைக்கல்லூரி அமைத்து தரப்படும் என உறுதியளித்திருந்தார் அந்த கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றவில்லை, இதனால் கோபமடைந்த பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் ஏற்காடு பேருந்து நிலையம் முன்பு சித்ரா குணசேகரனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே உறுதி அளித்த எந்த திட்டத்தையும் நிறைவேற்றாமல் மீண்டும் எப்படி உங்களால் போட்டி போட முடிகிறது என வசை பாடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலங்குடி தொகுதி
இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தர்ம தங்கவேல் என்பவரை மாற்றக்கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிட 40-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் அதிமுக வேட்பாளராக தர்ம தங்கவேல் என்பவரை நேற்று அதிமுக தலைமை அறிவித்தது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்தவர்
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தர்ம தங்கவேலு கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தவர். இதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததும் அதிமுகவினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். காலம்காலமாக அதிமுகவிற்கு கட்சியில் தொண்டனாக இருந்து வரும் பலர் இருக்கும்போது இத்தனை ஆண்டு காலமாக அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்து வந்த தர்ம தங்கவேலு என்பவருக்கு வாய்ப்பு கொடுத்தது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. எனவே அவரை மாற்றி வேறு வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

தீக்குளிக்க முயற்சி
ஆலங்குடி தொகுதியில் பல்வேறு பகுதிகளிலிருந்து வேன், கார் மற்றும் இருசக்கர வாகனம் மூலம் வந்த 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியிலிருந்து அதிமுக வேட்பாளரை மாற்ற வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். பேரணி கடைவீதி, வடகாடு முக்கம், அரசமரம் வழியாக பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியின்போது தொண்டர் ஒருவர் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். போலீசார் அவரை மீட்டு தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். வேட்பாளரை மாற்றும் வரை தினமும் தொடர்ந்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு தொகுதி
இதேபோல, செங்கல்பட்டு தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரி அதிமுகவினர் சாலை மறியல் செய்தனர். காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கஜா என்கிற கஜேந்திரனை செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுக தலைமை நேற்று அறிவித்த நிலையில் அதிமுக கட்சியின் செங்கல்பட்டு தொகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிமுகவில் நீண்டகாலமாக நற்பெயரோடு மக்களுக்கு தொண்டுகளை செய்து வந்த காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கவுஸ்பாஷா என்பவருக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தி அதிமுகவினர் இரண்டாம் முறையாக செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.












Click it and Unblock the Notifications