“அந்த தியாகி யார்?”.. சட்டையில் பேட்ஜ் உடன் சட்டசபைக்கு வந்த அதிமுகவினர்! என்ன மேட்டர்?
சென்னை: "அந்த தியாகி யார்?" என்ற வாசகம் பொறித்த பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். டாஸ்மாக்கில் ஊழல் என குறிப்பிடும் வகையில் சட்டையில் பேட்ஜ் அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வந்துள்ளனர்.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் என்ற புகாரை அடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், அது தொடர்பாக சட்டசபையில் தொடர்ந்து முழக்கம் எழுப்பி வந்தது அதிமுக. இந்நிலையில், சட்டையில் அது பற்றி கேள்வி எழுப்பி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேட்ஜ் அணிந்து உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை என்று குற்றம்சாட்டி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை, பேட்ஜ் அணிந்து வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில, "அந்த தியாகி யார்?" என்ற வாசகம் பொறித்த பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். டாஸ்மாக்கில் ஊழல் என குறிப்பிடும் வகையில் சட்டையில் பேட்ஜ் அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வந்துள்ளனர்.
டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாட்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டது.
அதில், தமிழ்நாட்டில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாகவும், டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்தது; டாஸ்மாக் அலுவலர்களுக்கு மது ஆலைகள் லஞ்சம் வழங்கியது; கொள்முதலை குறைத்து கணக்கு காட்டியது; பணியிட மாற்றம், பார் லைசென்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் உயர் அலுவலர்கள், மதுபான நிறுவனங்களிடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளதாகவும், டாஸ்மாக் உயர் அலுவலர்களின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை தங்களின் அறிக்கையில் குறிப்பிட்டது.
போக்குவரத்து நிறுவனங்களுக்கு டாஸ்மாக் ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
இதுதொடர்பாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில் தான் டாஸ்மாக் ஊழல் குறித்து திமுக அரசை விமர்சிக்கும் வகையில் "அந்த தியாகி யார்?" என்ற வாசகம் பொறித்த பேட்ச்சை சட்டையில் அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications