என்னமோ நடக்குது..மர்மமா இருக்குது! அவசரமாய் டெல்லிக்கு பறக்கும் ஓபிஎஸ்! ஸ்கெட்ச் போடும் ’வாரிசு’!
சென்னை : அதிமுக ஒற்றை தலைமை தொடர்பான விவகாரத்தில் பாஜக தலைமை எடப்பாடி பழனிச்சாமிக்கு திடீர் ஆதரவளித்திருப்பது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் நிலையில், இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் விரைவில் டெல்லிக்கு பயணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதிமுகவின் அதிகாரம் மிக்க பதவியான பொதுச் செயலாளர் பதவியை வகித்து வந்த ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு பல அரசியல் அதிரடிகள் அரங்கேறி வருகின்றன. ஜெயலலிதாவின் கண்ணசைவுக்கு ராணுவ கட்டுப்பாட்டோடு இயங்கி வந்த இயக்கம் தற்போது பல அணிகளாக சிதறுண்டு கிடக்கிறது. '
அதில் சசிகலா டிடிவி தினகரன் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சசிகலா தொடர்ந்து அரசியல் அதிரடி காட்டாமல் மிகுந்த அமைதியாகவே இருக்கிறார்.
பெட்ரோல் விலை குறைக்கணுமா? அதை பற்றி நீங்கள் வருத்தப்படலாமா? பிடிஆருக்கு அண்ணாமலை கேள்வி!
அதிமுக பொதுச்செயலாளர்
அவ்வப்போது அறிக்கைகள் அரசியல் பயணம் ஆன்மீகப் பயணம் என வெளியே தலைகாட்டி வந்தாலும் அவரது நடவடிக்கைகள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதிமுகவின் பொது செயலாளர் எனக் கூறி வந்தாலும் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதை மட்டுமே வலியுறுத்தி வரும் அவர் பெரிய அளவில் எந்த விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை மட்டுமே அவ்வப்போது சுட்டிக்காட்டி தான் அதிமுக பொதுச்செயலாளர் என மட்டும் கூறி வருகிறார். இது எந்த அளவு கை கொடுக்கும் என்பது அவருக்கே தெரியவில்லை என்கின்றனர் அதிமுகவினர்.
ஓ.பன்னீர்செல்வம்
மறுபுறம் அதிமுகவை விட்டு விலக்கி வைக்கப்பட்ட டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து தீவிர அரசியல் செய்து வருகிறார். திமுகவை விமர்சிப்பதில் தொடங்கி தனது தாய்க்கழகமான அதிமுக நிர்வாகிகளையும் வெகுவாக விமர்சித்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் திருந்திவிட்டார் எனக் கூறிவரும் அவர் எடப்பாடி பழனிசாமியை மட்டும் வெகுவாக விமர்சிப்பதில் கவனம் செலுத்துகிறார். கடந்த காலங்களில் பாஜக தலைமையை வெகுவாக விமர்சித்த அவர் தற்போது திடீரென கட்சி தலைமையிடம் இணக்கம் காட்டி வருகிறார். திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் நிச்சயம் அதிமுக அனைத்து அணிகளும் ஒன்று பட வேண்டும் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி உடன் சேர முடியாது கூட்டணியில் இணையலாம் எனக் கூறியிருக்கிறார்.
சசிகலா -டிடிவி தினகரன்
இப்படி சசிகலாவும் டிடிவி தினகரன் இரு வேறு கருத்துக்களை கூறிவரும் நிலையில் அதிமுக என்றாலே ஓபிஎஸ் இபிஎஸ் மோதல் தான் என்று ஆகிவிட்டது. இடையில் இருவரது தரப்பையும் சேர்ந்த சில மூத்த முன்னாள் நிர்வாகிகள் திடீரென திமுக பாஜக தரப்புக்கும் தாவி வருகின்றனர். மூன்றாம் கட்ட நிர்வாகிகள் அடிக்கடி வேறு கட்சிகளுக்கு செல்வதும் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் தான் ஓபிஎஸ் இபிஎஸ் விவகாரத்தில் கோவை செல்வராஜ் தாவல் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே ஓ.பன்னீர்செல்வத்தின் மிக முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்த கோவை செல்வராஜ் திடீரென ஓபிஎஸ் அணியில் இருந்தும் அதிமுகவில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
கோவை செல்வராஜ்
இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. காரணம் கோவை அரசியலைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகரம் போல செயல்பட்டு வந்த வேலுமணிக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் அரசியல் செய்து வந்தவர் கோவை செல்வராஜ் அவருக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாடு எடுப்பதற்கு காரணமாக கோவை செல்வராஜ் இருந்தார். மேலும் ஊடகங்கள் சமூக வலைதளங்கள் பொதுக்கூட்டங்கள் என எங்கு சென்றாலும் எடப்பாடி பழனிச்சாமி மிகக் கடுமையாக விமர்சித்து வந்தார். இது ஒரு வகையில் இபிஎஸ்க்கு இடைஞ்சலாகவே கருதப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி
கடுமையான விமர்சனங்கள் காரணமாக எடப்பாடி தரப்பில் அவர் இணைய வாய்ப்பில்லை என கருதப்பட்டு நிலையில் ஏற்கனவே கூறியது போல திமுகவில் இணைந்து இருதரப்புக்குமே அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜக தலைமையின் ஆதரவு தனக்குத்தான் இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் கூறிவந்த நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஜி 20 ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஓபிஎஸ் கடிதம்
இது பாஜக தலைமையின் முடிவு என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் உச்சகட்ட மகிழ்ச்சி அடைந்திருக்கும் நிலையில் முன்னாள் அமைச்சர்களும் மூத்த தலைவர்களும் மத்திய அரசு எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரித்து இருக்கிறது என பேசி வருகின்றனர். இது ஓ.பன்னீர்செல்வம் தரப்பை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு எதுவுமே பேசாமல் இருந்த நிலையில் திடீர் என இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதி இருக்கிறார்.
டெல்லி செல்ல முயற்சி
அது அவ்வளவாக கை கொடுக்காது என தெரிந்திருந்தும் ஒரு சடங்கிற்காகவே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளதாக கூறும் ஓபிஎஸ் தரப்பினர், இது தொடர்பாக முறையிட ஓ.பன்னீர்செல்வம் விரைவில் டெல்லி செல்ல இருப்பதாக கூறுகின்றனர். ஒரு வாரத்திற்குள் இந்த பயணம் இருக்கும் எனவும் ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்தது போல இந்த முறை ஓபிஎஸ் டெல்லி பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடி அமித்ஷா உள்ளிட்டு வரை சந்திக்க தீவிரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் முன்னதாகவே டெல்லியில் முகாமிட்டுள்ள சில ஓபிஎஸ் தரப்பு மூத்த தலைவர்கள் பாஜக தலைமையிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தற்போதைக்கு சந்திக்க விரும்பவில்லை என பாஜக தலைமை கூறியதாகவும் கூறப்படுகிறது. இருந்தும் விடாத ஓபிஎஸ் தனது மகனை டெல்லிக்கு அனுப்பி இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தீவிரமாக முயன்று வருகிறார் என்கின்றனர் தேனி தரப்பு ரத்தத்தின் ரத்தங்கள்.