ரெடியாகும் மெகா கூட்டணி: 6+1 போதுமா? தூதுவிட்ட இபிஎஸ்- பரம திருப்தியுடன் அதிமுக அணிக்கு வரும் பாமக!
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைய பாமக தயாராகிவிட்டதாம்; பாமகவுக்கு அதிமுக அணியில் 6 லோக்சபா தொகுதிகள் பிளஸ் 1 ராஜ்யசபா சீட் தருவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக- அண்ணா திமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றிருந்தது. பாமகவுக்காகவே கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக வன்னியர் உள் இடஒதுக்கீட்டை அறிவித்தார் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி.

வன்னியர் உள் இடஒதுக்கீடு அறிவிப்பால் தென் மாவட்டங்களில் மிக மிக கடுமையாக எதிர்ப்பை எடப்பாடி பழனிசாமி இன்றளவும் எதிர்கொண்டிருக்கிறார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி நிகழ்ச்சிக்கு சென்ற போதும் இதை எதிர்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. வன்னியர் உள் இடஒதுக்கீடு என்பது பாமகவுக்கான இமேஜை உயர்த்தியது என்பதை மறுக்க முடியாதது.
பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்து அன்புமணி எம்பியாக்கியதும் அதிமுகதான். என்னதான் பாஜக கூட்டணியில் இருந்த போது கிடைத்ததுதான் என கூறிக் கொண்டாலும் அதிமுகவின் தயவில்தான் அன்புமணி மீண்டும் எம்பியாக முடிந்தது. இந்த காரணங்களை முன்வைத்தே பாமகவை அதிமுக கூட்டணிக்கு கொண்டு வரும் முயற்சிகளை எடப்பாடி பழனிசாமி இடைவிடாமல் மேற்கொண்டார்.
இதில் முன்னேற்றம் ஏற்பட்டதாலேயே திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்துக்கு மாஜி அமைச்சர் சிவி சண்முகத்தை நேரில் அனுப்பினாராம் எடப்பாடி பழனிசாமி. பாமக தரப்பில் 9 தொகுதிகள் முதலில் கேட்கப்பட்டதாம். பின்னர் ஒருவழியாக தற்போது 6 லோக்சபா சீட் பிளஸ் 1 ராஜ்யசபா சீட் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் உறுதி தரப்பட்டிருக்கிறதாம். இதற்கும் பாமக தரப்பில் ஓகே.. இதுவே போதும் என பதில் தரப்பட்டுவிட்டதாம்.
இதனையடுத்து பாமகவும் அதிகாரப்பூர்வமாக அண்ணா திமுகவுடனான கூட்டணிப் பேச்சுகளை தொடங்க இருக்கிறது. அண்ணா திமுக அணியில் பாமக, தேமுதிக, புரட்சி பாரதம், புதிய தமிழகம் என அடுத்தடுத்து கட்சிகள் விரைவில் இணைய இருக்கிறதாம். இதனால் திமுகவுக்கு சவாலாக லோக்சபா தேர்தலில் அதிமுகவும் மெகா கூட்டணியுடன் களமிறங்குவது உறுதியாகிறது என்கின்றன அரசியல் வட்டார தகவல்கள்.












Click it and Unblock the Notifications