மல்லுக்கட்டு... குழிபறிப்பு...மோதல்களுடன் ஜோராக அதிமுக உட்கட்சி தேர்தல்- வெல்லப் போவது எந்த கோஷ்டி?
சென்னை: அதிமுக உட்கட்சித் தேர்தலில் தங்களது ஆதரவாளர்களே அதிகமாக பொறுப்புகளில் இருக்க வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு படுமும்முரமாக காய்களை நகர்த்தி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் உள்கட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்டத் தேர்தல் இன்றும் நாளையும் நடக்கிறது. டிசம்பர் 22,23-ல் 2-ம் கட்ட தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த இரண்டு நாட்களில் சுமார் 35 மாவட்டங்களுக்கு (அதிமுகவின் அமைப்பு ரீதியிலான மாவட்டங்கள்) நடக்கின்றன. கட்சியின் தலைமை பொறுப்பிற்கு சமீபத்தில் ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் சம பலத்துடன் தேர்வு செய்யப்பட்டனர். அதாவது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியின்றி இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஓபிஎஸ், இபிஎஸ் வியூகம்
இதனையடுத்து, அதிமுகவின் கிளைக்கழகம் தொடங்கி மாநகராட்சி கழகம் வரையிலான உள்கட்சி தேர்தலில் ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் தங்களின் ஆதரவாளர்கள் பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என திட்டமிட்டார்கள். இதற்காக மூத்த நிர்வாகிகள், மா.செ.க்களுடன் நடத்திய விவாதத்தில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.

வளைத்துப் போட்ட இபிஎஸ் தரப்பு
ஓபிஎஸ் தரப்புக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் போய்விடக் கூடாது என்பதில் இபிஎஸ் தரப்பு உன்னிப்பாக இருக்கிறது. இதனால் வடக்கு, மேற்கு மாவட்டங்களில் பெரும்பாலான மாஜி அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களை இபிஎஸ் தரப்பு வளைத்து வைத்திருக்கிறதாம். இப்படியான சூழ்நிலையில்தான் தேர்தலை நடத்துகின்றனர் அதிமுக தலைவர்கள்.

எடப்பாடி ஆலோசனை
அந்தந்த மாவட்டத்தில் வலிமையாக இருக்கும் மாஜிக்களின் ஆதரவுடன் ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் காய்களை நகர்த்தி தங்களின் ஆட்களை களமிறக்கியுள்ளனர். மேலும், தனது ஆதரவாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தேர்தல் நடக்கும் மாவட்டங்களின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பவர்களிடம் நேற்று இரவு நீண்ட நேரம் பேசியபடி இருந்துள்ளார் எடப்பாடி.

பல இடங்களில் மல்லுக்கட்டு
தேர்தல் பொறுப்பாளர்களாக உள்ள அதிமுகவினரும் எடப்பாடியின் விருப்பத்தை ஆமோதித்துள்ளனர். அதேபோல, ஓபிஎஸ்சும் காய்களை நகர்த்த, தென் மாவட்டங்களில் சில இடங்களில் மட்டுமே ஆதரவு அவருக்கு கிடைத்திருக்கிறது. தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், திருத்தனி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாஜிக்களின் ஆதரவாளர்களுக்கும், மாஜிக்களின் எதிர் தரப்பு ஆட்களுக்கும் மோதல் வெடித்திருக்கிறது. தேர்தல் நடக்கும் மாவட்டங்களில், தேர்தல் எப்படி நடக்கிறது என்பதை விசாரித்து, உடனுக்குடன் எடப்பாடிக்கு பாஸ் பண்ணியபடி இருக்கிறார் அவரது வலதுகரமான சேலம் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications