யாரை ஏமாத்துறீங்க அண்ணாமலை? அதிமுக நிர்வாகி திருத்தணி அரி பேச்சால் சர்ச்சை! ஓயாத கூட்டணி பஞ்சாயத்து!
சென்னை: அண்ணாமலையின் நடவடிக்கைகளை பார்த்தால் பூனைக்கும் காவல் -பாலுக்கும் காவல் என்பதை போல் இருப்பதாக விமர்சித்துள்ளார் அதிமுக அமைப்புச் செயலாளர் திருத்தணி அரி.
திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறிய அண்ணாமலை சொத்துப்பட்டியலை மட்டுமே வெளியிட்டதாகவும், அதன் மீதான நடவடிக்கையை மத்திய அரசிடம் சொல்லி ஏன் இன்னும் எடுக்கவில்லை எனவும் திருத்தணி அரி வினவியுள்ளார்.

மத்தியில் ஆட்சி அதிகாரத்தை வைத்துள்ள பாஜக, திமுக ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் பட்டியலை வெளியிட்டிருந்தால் ஆட்சி அதிகாரம் இல்லை அதனால் நடவடிக்கை எடுக்கவில்லை என எடுத்துக்கொள்ளலாம் என்றும், ஆனால் பாஜக ஏன் நடவடிக்கை எடுக்க யோசிக்கிறது எனவும் அரி வினவினார்.
அதிமுக -பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என்றும் அண்ணாமலைக்கும் தங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பேட்டிக் கொடுத்து 4 நாட்கள் கூட ஆகவில்லை.
ஆனால் அதற்குள் கூட்டணியில் இது போன்ற கசப்பான நிகழ்வுகள் தொடர்கின்றன. இதனிடையே அதிமுக முக்கியப் பிரமுகர்களின் நடவடிக்கைகளை வைத்து பார்த்தால் அண்ணாமலை மீது இன்னும் அவர்களுக்கு அதிருப்தி இருப்பதையே காட்டுகிறது.

தமிழகத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாகவும் ஒரு பக்கம் அதிமுகவுடன் பேசிக்கொண்டே மற்றொரு பக்கம் கருணாநிதி பேனா சிலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என சாடினார்.
மத்திய அரசு கருணாநிதி பேனா சிலைக்கு அனுமதி அளித்த விவகாரத்தை சுட்டிக்காட்டி இன்னும் தனது மனதில் தோன்றிய குமுறலை கொட்டித்தீர்த்தார் திருத்தணி அரி.
அதிமுக -பாஜக கூட்டணி இடையே இது போன்ற நிலை நீடித்தால் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு கட்சிகளின் தொண்டர்களும், நிர்வாகிகளும் மனமுவந்து தேர்தல் பணியாற்றுவார்களா என்பது சந்தேகமே.












Click it and Unblock the Notifications