தர்மயுத்தம் 2.0? கொங்கில் ஆட்டம் காணும் அதிமுக? கோட்டையில் எடப்பாடிக்கு கல்தா கொடுத்த செங்கோட்டையன்!
சென்னை: அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது மூத்த முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக கடந்த சில தினங்களாகவே யூகங்கள் உலாவி வருகிறது. நேற்று பட்ஜெட் கூட்டத் தொடரில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்த நிலையில் இன்றும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அறைக்குச் செல்லாமல் சபாநாயகர் அறைக்குச் சென்று செங்கோட்டையன் பேசியதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இரண்டாவது தர்மயுத்தம் அதிமுகவில் தொடங்கலாம் என கூறப்படும் நிலையில் கொங்கு மண்டலத்தில் பரபரப்பு நிலவுகிறது.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக அதிமுக எம்எல்ஏக்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

அந்த கூட்டத்தில் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் செங்கோட்டையன் அதிமுக எம்எல்ஏக்கள் அறைக்கு செல்லாமல் சபாநாயகர் அறைக்கு சென்றார்.
அங்கு சிறிது நேரம் காத்திருந்தவர், தொடர்ந்து வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். நேற்று பட்ஜெட் கூட்டத் தொடரை அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்த நிலையில் செங்கோட்டையன் விரைவாக கோட்டையை விட்டு புறப்பட்டு சென்றார். இன்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை அவர் புறக்கணித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை செங்கோட்டையன் புறக்கணித்து வருவது அதிமுகவிலும் கொங்கு மண்டலத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியை செங்கோட்டையன் கடந்த சில மாதங்களில் மட்டும் பலமுறை புறக்கணித்து இருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவிநாசி அத்திக்கடவு திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்டது. அந்த அழைப்பிதழில் தனது பெயரை கீழே போட்டதாலும் நிகழ்ச்சியில் அழைப்பிதழ் மற்றும் மேடையில் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரது புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டதாக கூறி செங்கோட்டையன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் அதற்கு முன்பிருந்த எடப்பாடி பழனிச்சாமி மீது செங்கோட்டையன் கடும் அதிருப்தியில் இருந்ததாகவும். இதனை ஒரு காரணமாக கூறி அந்த நிகழ்ச்சியை புறக்கணித்ததாக கூறப்பட்டது. ஆனால் செங்கோட்டையன் அதனை மறுத்திருந்தார். இதற்கிடையே அதிமுக முக்கிய முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான எஸ்பி வேலுமணியின் இல்ல திருமண நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்ற நிலையில் அதில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவில்லை.
அதற்கு பிறகு திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி நேரில் கலந்து கொண்டார். ஆனால் அந்த விழாவுக்கு வந்திருந்த செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கு முன்பே மணமக்களை வாழ்த்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையன் இடையே பனிப்போர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விரைவில் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திரும்பலாம் எனவும் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டவர்களோடு சேர்ந்து இரண்டாவது தர்மயுத்தத்தை தொடங்குவார் என கூறப்படுகிறது. இதனால் கொங்கு மண்டலத்திலும் அதிமுகவிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் தற்போது கொங்கு மண்டலத்திலும் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கி இருப்பது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications