நம்மில் ஒருவர்... நமக்கான தலைவர் அதிமுகவின் தேர்தல் பஞ்ச் டயலாக் #EPSforTN
நம்மில் ஒருவர் நமக்கான தலைவர் என்ற பஞ்ச் வசனத்துடன் அதிமுக ஐடி விங் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டது.
சென்னை: ரத்தத்தின் ரத்தங்களே என்று சொன்னார் எம்ஜிஆர். அன்பு சகோதரியின் ஆட்சி மலர வாக்களியுங்கள் என்று கேட்டார் ஜெயலலிதா. இப்போது முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை நம்மில் ஒருவர் நமக்கான தலைவர் என்ற வசனத்துடன் களமிறக்கியுள்ளனர்.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு நேற்று விடை கிடைத்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை சந்திக்கிறது அதிமுக. தன்னை முதல்வராக தேர்வு செய்த அதிமுக தொண்டர்களுக்கு நன்றி கூறி கடிதம் எழுதியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. சாமானியன், உழவன் மட்டுமே அதிமுகவில் முதல்வர் ஆக முடியும் என்று கூறியுள்ளார்.
2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியை தொடர உறுதி ஏற்போம் என்று அழைப்பு விடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் இருக்கும் நிலையில் வேலையை படு பரபரப்பாக ஆரம்பித்து விட்டது அதிமுகவின் ஐடி அணி. "நம்மில் ஒருவர் நமக்கான தலைவர்" என்ற வசனத்தை பயன்படுத்தி போஸ்டர் போட்டு வாக்கு சேகரிக்க ஆரம்பித்து விட்டது.
பிற கட்சிகள் ஒற்றை தலைமை என்று சொல்லி வந்த நிலையில் இதுநாள் வரை ஓபிஎஸ் இபிஎஸ் இருவரை போட்டு பிரச்சாரம் செய்தனர். வரும் சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை மட்டும் முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க உள்ளது.
ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களால் நான் மக்களுக்காக நான் என்று சொல்லி வாக்கு சேகரிப்பார். அமைதி வளம் வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தை சொல்லி பேசுவார். அதிமுக வரும் தேர்தலில் தாரக மந்திரமாக என்ன சொல்லப்போகிறது என்று பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications