துரோகங்கள் சூழ் அதிமுக? எம்ஜிஆருக்கு ஜெ., ஜெ.வுக்கு சசி, சசிக்கு ஓபிஎஸ்-இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு இபிஎஸ்?
சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அதிமுக தொடங்கப்பட்டு அரை நூற்றாண்டுகளாகிவிட்டது.. அதிமுகவின் வரலாறு நெடுகிலும் துரோகங்கள் மாறி மாறி இழைக்கப்பட்டதையே அதன் சரித்திரப் பக்கங்கள் சொல்கின்றன.
திமுகவில் அண்ணா மறைவுக்கு பின்னர் தலைவரானார் கருணாநிதி. கருணாநிதி அமைச்சரவையில் இடம்பெற விரும்பினார் எம்ஜிஆர். அது நிராசையாகிப் போனது. அப்போது எம்ஜிஆரின் கலகக் குரல் திமுகவில் பூகம்பத்தை கிளப்பியது. இன்னொரு வகையில் சொல்வதானால் கருணாநிதிக்கு எம்ஜிஆர் துரோகம் செய்தார் அல்லது எம்ஜிஆருக்கு கருணாநிதி துரோகம் செய்தார் என இரு வெர்சன்களும் உண்டு.
திமுக எனும் பேரியக்கத்தில் இருந்து 1971-ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானது. திமுகவின் 2-ம் கட்ட தலைவர்கள் பலரும் எம்ஜிஆரின் தலைமையில் அதிமுகவில் ஐக்கியமாகினர். அண்ணா திமுகவும் அரியாசனம் ஏறியது. எம்ஜிஆரும் கருணாநிதி அமர்ந்திருந்த முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்.
1980களின் தொடக்கம் வரை எம்ஜிஆர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள்தான் அதிமுகவின் முகங்களாக இருந்தனர். 1982-ல் எம்ஜிஆரால் நடிகை ஜெயலலிதா அரசியலுக்கு கொண்டுவரப்பட்டார்.. அண்ணா திமுக கொள்கை பரப்புச் செயலாளராக்கப்பட்டார். அண்ணா திமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக்கப்பட்டார். அப்போதிருந்தே துரோகம் என்ற சொல் இயல்பான ஒன்றாக அதிமுகவில் இடம்பெறத் தொடங்கிவிட்டது.

எம்ஜிஆர் காலத்தில் துரோகம்
எம்ஜிஆருக்கு எதிராக டெல்லியுடன் இணைந்து துரோகம் செய்தார் ஜெயலலிதா; எம்ஜிஆருக்கு எதிராக ராஜீவ் காந்தியுடன் இணைந்து துரோகம் செய்தார் ஜெயலலிதா என எத்தனையோ விவகாரங்கள் தலைப்பு செய்திகளாகின.. ஏன் எம்ஜிஆருக்கு எதிராக சீனியர் அமைச்சர்களே துரோகம் செய்ததாக சொல்லி ஒரே நாளில் சீனியர் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்த நிகழ்வுகளும் 1980களில் உண்டு. ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவின் துரோகத்தை மனம் திறந்து சொல்லி அவருடன் தொடர்பு வைக்காதீர்கள் என எம்ஜிஆர் அறிக்கை வெளியிட்டார் என்கிற சாட்சிகளும் இப்போதும் உண்டு.

எம்ஜிஆர் மறைவுக்கு பின்
எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக செங்குத்து பிளவை கண்டது. எம்ஜிஆரால் வளர்ந்தோம் என்ற நன்றி விசுவாசம் காட்டியவர்கள் அவரது மனைவி ஜானகி அம்மையாருக்கு பின்னே நின்றார்கள்; என்னதான் நடக்கட்டும் பார்க்கலாம் என்றவர்கள் எம்ஜிஆரின் மனைவி ஜானகிக்கு துரோகம் செய்துவிட்டு ஜெயலலிதா பின்னால் அணிவகுத்தனர்; ஜெயலலிதாவின் இந்த தனி ஆவர்த்தனத்துக்குப் பின்னர் சசிகலா நடராசன் எனும் சூத்திரதாரியும் அவர் தம் சுற்றத்தாரும் கரம் கோர்த்து நின்றதும் வரலாறுதான்.

ஜெ. தலைமையில் அதிமுக
ஒருகட்டத்தில் ஜானகி- ஜெயலலிதா அணிகள் இணைந்து ஒருங்கிணைந்த அதிமுக உதயமானது. ஜெயலலிதா தலைமையில் எம்ஜிஆர் காலத்து சீனியர்கள் சங்கமித்து இருந்தனர். ஆனால் ஜெயலலிதா மட்டுமே தலைவராக இருக்க வேண்டும்; அதுதான் தங்களுக்கு நல்லது என சசிகலா கோஷ்டி நினைத்தது. அதனால் ஜெயலலிதா தலைமையில் திரண்டு நின்ற சீனியர்கள் அத்தனை பேரும் துரோகிகளாக சித்தரிக்கப்பட்டு துரத்தப்பட்டனர்.

சசிகலா குடும்பம்
காலம்தான் வலியது! துரோகி துரோகி என ஒவ்வொருத்தராக முத்திரை குத்திய சசிகலா குடும்பமும் துரோகப் பட்டம் சுமந்ததுதான் விந்தை... நெடுஞ்செழியன் காலம் தொடங்கி நத்தம் விஸ்வநாதன் வரை இத்தகைய சசிகலா குடும்பத்தின் துரோகப் பட்டியல் நெடியது.. அவ்வளவு ஏன் ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்களையே கூட துரோகிகளாக்கி வைத்திருந்ததுதான் சசிகலா கோஷ்டி.

ஜெ.மறைவுக்குப் பின்
ஜெயலலிதா மறைந்தார்.. ஓபிஎஸ் முதல்வரானார்.. அப்போது ஓபிஎஸ் துரோகி என முத்திரை குத்தப்பட்டு இபிஎஸ் முதல்வராக்கப்பட்டார்; டிடிவி தினகரன் அதிமுக துணைப் பொதுச்செயலாளரானார். சசிகலா சிறைக்குப் போன தருணத்தில் தினகரனுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகியாகிப் போனார்.. பின்னர் துரோகியாக இருந்த ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து நின்றனர். சசிகலாவுக்கு துரோகம் செய்தவர்களாக சொல்லபட்ட இபிஎஸ்,ஓபிஎஸ் இரட்டை குழல் துப்பாக்கிகளாக இருந்தனர். இப்போது இபிஎஸ்க்கு ஓபிஎஸ்-ம் ஓபிஎஸ்-க்கும் இபிஎஸ்-ம் துரோகிகளாகி நிற்கின்றனர்.

நீதிபதி ஆறுமுகசாமி
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைப்படி பார்த்தால், ஜெயலலிதாவுக்கு முதல் துரோகியாக சசிகலாதான் இருந்திருப்பார் போல.. அத்தனை விரல்களையும் ஒருசேர சசிகலாவுக்கு எதிராக நீட்டி நிற்கிறது நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை. ஆனால் இதில் பரிதாபமான ஒரு விஷயம் திமுகதான். எம்ஜிஆர் காலம் தொடங்கி இன்றைய இபிஎஸ் வரை இத்தனை துரோகங்களில் நீந்தி கொண்டிருக்கும் அதிமுகவுக்கு திமுகதான் காலந்தோறும் தீயசக்தி என்பது எத்தனை முரண்! கட்டப்பாக்களின் ராஜ்ஜியம்!












Click it and Unblock the Notifications