செங்கோட்டையன் ராஜினாமா.. காலியான கோபி தொகுதி.. இடைத்தேர்தல் வருது? பரபரக்கும் தமிழக அரசியல்
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். நாளை தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படும் நிலையில், இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்ற கோபிசெட்டிபாளையம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார் செங்கோட்டையன். கட்சி மாறினால் கட்சி தாவல் தடை சட்டம் மூலம் அவரின் பதவி பிரிக்கப்படும் என்பதால் அதற்கு முன்பாக ராஜினாமா செய்துள்ளார்.

இதன் மூலம் அவரின் கோபிசெட்டிபாளையம் தொகுதி காலியாகி உள்ளது. இதற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா என்ற கேள்வி உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் மேலும் 3 தொகுதிகள் காலியாக உள்ளன. நாமக்கல் சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ பொன்னுசாமி மறைவால் காலியாக உள்ளது. மேலும் வால்பாறை தொகுதி அதிமுக சட்டசபை உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைவால் அந்த தொகுதியும் காலியாக உள்ளது.
முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் கடந்த சட்டசபை தேர்தலின்போது ஆலங்குளம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பாக வென்ற நிலையில் அவர் திமுகவில் இணைந்து, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் அந்த தொகுதியும் காலியாக உள்ளது.
தேர்தல் நடக்க வாய்ப்பு குறைவு?
ஆனால் இந்த 4 தொகுதிகளில் தேர்தல் நடக்க வாய்ப்பு குறைவாக உள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளன. அதற்கு முன் இடைத்தேர்தலுக்கு தேவையற்ற செலவுகள், ஏற்பாடுகள் செய்யப்படுமா என்பது சந்தேகம். அதோடு தற்போது SIR பணிகள் நடக்கின்றன.
இந்த பணிகள் முடிய டிசம்பர் முதல் வாரம் ஆகும். அதன்பின் இறுதி வாக்காளர் பட்டியல் வந்து அதில் மேல்முறையீடுகள் செய்ய ஜனவரி வரை அவகாசம் உள்ளது. இதனால் ஜனவரி வரை இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புகள் குறைவு. அப்படியே தேர்தல் அறிவித்தாலும்.. ஜனவரி அறிவித்து பிப்ரவரி தேர்தல் நடத்தி பின்னர் மீண்டும் ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடத்த வாய்ப்புகள் குறைவு. அதனால் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருவது சந்தேகமே.
சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் தீவிரம்
வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதற்கும் திருத்துவதற்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது. வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கும் நோக்கில், ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்னதாகவும் அல்லது தேவைப்படும்போதும் ஆணையம் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும். அடிக்கடி ஏற்படும் இடமாற்றங்கள், இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படாமை போன்ற காரணங்களால், ஒரு வாக்காளர் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதைத் தவிர்க்க இந்தச் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) அறிவிக்கப்பட்டது. தகுதியான யாரும் விடுபடாமலும், தகுதியில்லாதவர்கள் பட்டியலில் இடம்பெறாமலும் இருப்பதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
SIR செயல்முறையின் கால அளவு என்ன?
SIR செயல்பாடு நவம்பர் 4, 2025 அன்று தொடங்கி, பிப்ரவரி 7, 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டோடு முடிவடையும்.
SIR-ன் பல்வேறு கட்டங்கள் என்னென்ன?
வீடுதோறும் கணக்கெடுப்பு: டிசம்பர் 4 வரை
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: டிசம்பர் 9
விண்ணப்பங்கள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் காலம்: டிசம்பர் 9 முதல் ஜனவரி 8, 2026 வரை
அறிவிப்பு கட்டம் (வெளியிடுதல், விசாரணை மற்றும் சரிபார்த்தல்): டிசம்பர் 9 முதல் ஜனவரி 31, 2026 வரை ERO-க்கள் மூலம் கணக்கெடுப்புப் படிவங்கள் மீதான முடிவுகளும், விண்ணப்பங்கள் மற்றும் ஆட்சேபனைகளும் ஒரே நேரத்தில் தீர்வு காணப்படும்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: பிப்ரவரி 7, 2026.












Click it and Unblock the Notifications