அண்ணா காலத்து அரசியல்வாதியின் பரிதாபம்! ஓபிஎஸ்- சசிகலா கோஷ்டிக்கு முட்டுக் கொடுக்கும் பண்ருட்டி!
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணா காலத்தில் அரசியலுக்கு வந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அண்ணா காலத்தில் அரசியல் பயணத்தை தொடங்கிய அந்த பண்ருட்டி ராமச்சந்திரன், இன்றைக்கு அதிமுகவின் உட்கட்சி மோதலில் எடப்பாடி பழனிசாமி கோஷ்டிக்கு எதிராக தெருச்சண்டை போட்டு வருகிறார்.
பொதுப்பணித்துறையில் பொறியாளராக பணிபுரிந்த பண்ருட்டி ராமச்சந்திரன், 1967-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏ.வானார். அப்போது அண்ணா முதல்வரானார். அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் திட்ட மதிப்பீட்டுக் குழு தலைவராக இருந்தார் பண்ருட்டியார்.
திமுகவின் இளம் தலைவர்கள் வரிசையில் இருந்த பண்ருட்டியால் அண்ணா மறைவுக்குப் பின்பு 1971-ம் ஆண்டு கருணாநிதி அமைச்சரவையில் இடம்பிடித்தார். திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டு எம்ஜிஆர் அதிமுக தொடங்கிய போது அவருடன் கைகோர்த்த திமுக இளம் தலைவர்களில் பண்ருட்டியாரும் ஒருவர். அதனால் அதிமுகவில் எம்ஜிஆரிடம் இயல்பாகவே பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு முக்கியத்துவம் கிடைத்தது.

எம்ஜிஆரின் நம்பிக்கை
எம்ஜிஆரின் குட்புக்கில் இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், அக்கட்சியின் வடமாவட்ட முகமாக இருந்தார்; எம்ஜிஆர் அமைச்சரவையில் அவருக்கு மிக முக்கியமான நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தார். அதனால்தான் தமிழீழத் தமிழர் பிரச்சனையை ஐ.நா. சபையில் சர்வதேச நாடுகளுக்கு விளக்க எம்.ஜிஆரால் 1983-ம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டார் அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன். 70 நாட்கள் முகாமிட்டு ஐநா சபையில் ஈழத் தமிழர் மற்றும் மலையகத் தமிழர் பிரச்சனையை சர்வதேச நாட்டு பிரதிநிதிகளுக்கு விளக்கியவர் பண்ருட்டி ராமச்சந்திரன். இதனால்தான் எம்ஜிஆர் ஒரு கடவுள் என்ற ரேஞ்சுக்கு பிரபாகரன் உள்ளிட்ட ஈழத் தமிழர்கள் போற்றினர். இதன்பின்னரே தமிழீழத் தமிழர் பிரச்சனை விஸ்வரூபமெடுத்தது. பண்ருட்டி ராமச்சந்திரன் முயற்சிக்கு பின்னர்தான் சர்வதேச நாடுகள் ஐநா சபையில் இலங்கையை அப்போது கண்டித்தது. பண்ருட்டி ராமச்சந்திரனை பாராட்டும் வகையில் சென்னை திரும்பிய அவரை விமான நிலையத்துக்கே சென்று வரவேற்று ஊர்வலமாக அழைத்து வந்தார் எம்.ஜி.ஆர்.

எம்ஜிஆரின் பிரதிநிதி
1977-ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டு எம்ஜிஆர் மறையும் வரையில் அமைச்சராக பதவி வகித்தார் பண்ருட்டியார். 1987-ம் ஆண்டு ராஜீவ்- ஜெயவர்த்தனா ஒப்பந்தம் கையெழுத்தானபோதும் எம்ஜிஆரால் தமது பிரதிநிதியாக, தமிழக அரசின் பிரதிநிதியாக கொழும்புவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் பண்ருட்டியார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா தலைமை ஏற்றார். பின் ஜெயலலிதாவால் தூக்கியடிக்கப்பட்ட போது நால்வர் அணியினரில் ஒருவராக பண்ருட்டியார் இருந்தார்..

பாமக, தனிக்கட்சி, தேமுதிக
பின் டாக்டர் ராமதாஸ் உருவாக்கிய பாமகவில் சேர்ந்து மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டு அக்கட்சிக்கு முதல் எம்.எல்.ஏ. சிறப்பை 1991-ல் பெற்று தந்தார் பண்ருட்டி ராமச்சந்திரன். அப்போது பாமகவின் சின்னம் யானை. அதனால் யானையில் ஊர்வலமாக சட்டசபைக்கு அழைத்துவரப்பட்டு பரபரப்பை கிளப்பினார் பண்ருட்டியார். பின்னர் பாமகவில் இருந்து விலகி மக்கள் நல உரிமைக் கழகம் என்ற தனிக்கட்சி தொடங்கினார். ஆனால் அந்த கட்சியை நடத்த முடியாமல் புதியதாக கட்சி தொடங்கிய விஜயகாந்த் தலைமையை ஏற்றார். அக்கட்சியில் சேர்ந்து எம்.எல்.ஏ.வாகி சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும் ஆகி மீண்டும் அரசியலில் லைம் லைட்டில் வலம் வந்தார். ஒரு கட்டத்தில் அங்கும் தாக்குப் பிடிக்க முடியாமல் மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கே திரும்பினார்.

சசிகலா, ஓபிஎஸ்-க்கு ஆதரவு
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவினர் சசிகலாவை சின்னம்மா என அழைத்த போது எதுவும் கருத்து சொல்லாமல் இருந்தார் பண்ருட்டி ராமச்சந்திரன். பின்னர் சசிகலா தலைமையை ஏற்றார். அதிமுகவின் ஆகப் பெரும் சீனியர் என்ற அடைமொழியோடு உலா வந்த பண்ருட்டியால் சில காலம் அரசியலைவிட்டே ஒதுங்கி இருந்தார். இப்போது உட்கட்சி மோதலால் அதிமுக பிளவுபட்டு நிற்கிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ்-சசிகலா கோஷ்டியை முழு வீச்சில் ஆதரிக்கிறார் பண்ருட்டியார். ஆம் அண்ணா காலத்து அரசியல்வாதி.. அம்மாவிடம் தஞ்சமடைந்து இப்போது சின்னம்மா சசிகலா- ஓபிஎஸ் ஆதரவு என காலம் போன கடைசியில் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications