அதிமுகவில் திடீர் குழப்பம்- பாஜக கூட்டணியை முறிக்க எதிர்ப்பு? எடப்பாடி மீது மேற்கு தலைகள் அதிருப்தி?
சென்னை: பாஜகவுடனான கூட்டணியை முறிக்கக் கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியின் மேற்கு மண்டல தலைவர்கள் போர்க்கொடி தூக்கி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஜெயலலிதா, அண்ணா குறித்த விமர்சனங்கள் அதிமுக- பாஜக கூட்டணியில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்திவிட்டது. அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அக்கட்சி இரண்டு முறையும் அறிவித்துவிட்டது.

அதிமுக மா.செ.க்கள் கூட்டம்: இந்த நிலையில் சென்னையில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணி இல்லை என்கிற தீர்மானத்தை அதிமுக நிறைவேற்ற இருக்கிறது என்பது அக்கட்சி வட்டார தகவல்கள்.
சமாதான முயற்சிகள் தோல்வி: தமிழ்நாடு பாஜகவுடன் இணக்கமாக போக மேற்கொண்ட முயற்சிகள், டெல்லி வரை சென்று மேற்கொள்ளப்பட பேச்சுவார்த்தை எதுவும் பலன் தரவில்லை. இதனையடுத்தே பாஜகவுடனான கூட்டணியை முறிப்பது என்பதில் அதிமுக தலைவர்கள் திட்டவட்டமாக உள்ளனர். இதனால்தான் இன்று அதிமுக மா.செ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறதாம்.
பாஜக கூட்டணியை முறிக்க கூடாது: இந்நிலையில் அதிமுகவில் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. என்னதான் அவமானப்படுத்தினாலும் பாஜகவுடனான கூட்டணியை ஒரு போதும் முறிக்கவே கூடாது என்பது அதிமுகவின் மூத்த தலைவர்கள் சிலரது போர்க்குரலாக வெளிப்பட்டு வருகிறதாம். அப்படி எல்லாம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கூடாது; அதை அனுமதிக்கவும் முடியாது என கூறி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனராம் அந்த தலைவர்கள்.

20 தொகுதிகளை கொடுத்துடுங்க.. : அத்துடன் லோக்சபா தேர்தலில் பாஜக கேட்கிற 20 தொகுதிகளைக் கொடுத்துவிட்டாலே இவ்வளவு தூரம் பிரச்சனை வளர்ந்திருக்காது.. லோக்சபா தேர்தல்களில் எம்ஜிஆர் காலத்தில் கூட காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளை கொடுத்திருக்கிறோம் அல்லவா? என்கிற வாதத்தையும் அந்த தலைவர்கள் முன்வைக்கின்றனராம்.
எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்த 'மேற்கு': அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த நிலையில் இருக்கும் அந்த மேற்கு மண்ட தலைவர்கள்தான் இப்படி, பாஜகவுக்காக வரிந்து கட்டி நிற்கின்றனராம். தற்போது கலகக் குரல் எழுப்பும் இந்த தலைவர்கள் பாஜகவுடன் மிக நெருக்கமானவர்களாக இருக்கிறவர்கள் என தெரிந்தும் எடப்பாடி பழனிசாமி அரவணைத்துக் கொண்டிருந்தார். இப்போது பாஜகவை பகைக்கவே கூடாது என்கிற முடிவில் இரு தலைவர்களும் உறுதியாக இருக்கின்றனராம். இதனால் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் என்ன மாதிரியான தீர்மானம் நிறைவேற்றுவது என்கிற குழப்பம் அதிமுகவில் விஸ்வரூபம் எடுத்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications