ரூ40 கோடிக்கு ஏலம் விடப்பட்டதா அதிமுக ராஜ்யசபா சீட்? கொந்தளிப்பில் சீனியர்கள்
Recommended Video
சென்னை: அதிமுகவில் ராஜ்யசபா சீட் ஏலம் விடப்பட்டிருப்பதாகவும் ரூ40 கோடி கொடுத்து தென்மாவட்ட பிரமுகர் ஒருவர் வாங்கிவிட்டதாகவும் வெளியான தகவல்களால் அக்கட்சியின் சீனியர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனராம்.
அதிமுகவுக்கான 3 ராஜ்யசபா இடங்களில் பாமகவுக்கு ஒன்று ஒதுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். இதையடுத்து எஞ்சிய 2 இடங்களுக்கான வேட்பாளர்கள் யார் என்பதில் மிகப் பெரும் அக்கப்போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஓபிஎஸ் அணியில் இருந்து ஈபிஎஸ் - அணிக்கு தாவிய கேபி முனுசாமி தமக்கு எம்.பி. சீட் தர வேண்டும் என ஒற்றைக்காலில் நின்று வருகிறார். அவருக்கு எதிராக தம் அண்ணனுக்கு ராஜ்யசபா சீட் கேட்டு வந்த அமைச்சர் சி.வி. சண்முகம் இப்போது முனுசாமியை ஆதரிக்கிறாராம்.

தமிழ்மகன் உசேனுக்கு எதிர்ப்பு
இன்னொரு பக்கம் தமிழ்மகன் உசேன், அன்வர் ராஜா இருவரும் சிறுபான்மையினர் என்பதால் தங்களுக்கே சீட் தர வேண்டும் என கொடிபிடித்தனர். இவர்களில் தமிழ் மகன் உசேனை அதிமுக தலைமை டிக் செய்திருக்கிறதாம். இதனால் கோபமடைந்த அன்வர் ராஜா, யாருக்கு வேண்டுமானாலும் சீட் கொடுங்க.. ஆனால் தமிழ் மகன் உசேனுக்கு தரவே கூடாது என்கிறாராம்.

கட்சி நிதி கொடுத்தால் சீட்
இந்த களேபரங்களுக்கு மத்தியில்தான் அதிமுகவின் ராஜ்யசபா சீட் ஏலம் விடப்பட்டிருக்கிறதாம். அதாவது கட்சி நிதி என்கிற பெயரில் இந்த ஏலம் விடப்பட்டுள்ளதாம். தென்மாவட்டத்தைச் சேர்ந்த மாஜி அமைச்சர், தமது சொந்த மாவட்டத்தில் பிடிமானம் இல்லாமல் தனிமரமாக இருந்து வருகிறார். அவர்தான் கட்சி நிதியாக ரூ40 கோடி தருகிறேன் என கூறி ராஜ்யசபா சீட்டை ஏலம் எடுத்துவிட்டாராம்.

கடும் அதிருப்தியில் சீனியர்கள்
இத்தகவலை கேள்விபட்ட கேபி முனுசாமி உள்ளிட்ட சீனியர்கள், இது மோசமான அணுகுமுறையாக இருக்கிறதே... ராஜ்யசபா எம்.பி. சீட்டை எல்லாம் ஏலம் விடுவதா? என கொந்தளித்து போனார்களாம்.

அதிமுக இன்று ஆலோசனை
ஆனாலும் அதிமுக தலைமையோ, நாங்க கட்சிக்குத்தானே நிதி வசூலித்தோம்.. இது கடந்த காலத்திலும் நடந்ததுதானே.. எங்களுக்காக வாங்கினோம் என திருப்பி பதில் தந்திருக்கிறதாம். இன்றைய அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் இந்த பஞ்சாயத்து வெடிக்க இருக்கிறது என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications