தமிமுன் அன்சாரிக்கு வலைவிரிக்கும் அதிமுக! சிறுபான்மையினர் ஓட்டுக்களை மீட்க தீவிரம் காட்டும் எடப்பாடி
சென்னை: பாஜகவை கூட்டணியிலிருந்து கழற்றிவிட்ட எடப்பாடி பழனிசாமி, இழந்த சிறுபான்மையினர் ஓட்டுக்களை மீண்டும் அதிமுகவுக்கு மீட்க தீவிரமாக காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டார்.
அந்த வகையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியை மீண்டும் அதிமுக பக்கம் இழுப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் தீவிரமாக களமாடி வரும் தமிமுன் அன்சாரி இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேச 2 முறை நேரம் கேட்டிருக்கிறார்.

ஆனால் 2 முறையும் தமிமுன் அன்சாரிக்கு முதலமைச்சர் தரப்பில் நேரம் ஒதுக்கப்படவில்லை. யார் யாரையோ தினமும் கோட்டையில் சந்திக்கும் முதல்வர், நமக்கு 2 முறை நேரம் கேட்டும் கொடுக்கவில்லையே என்ற அதிருப்தியில் இருந்து வருகிறார் தமிமுன் அன்சாரி. இதனால் இதனை சாதகமாக பயன்படுத்தி முதல் வேலையாக அன்சாரியை அதிமுக கூட்டணிக்குள் இழுத்து வரும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி இறங்கிவிட்டார்.
அதிமுக கூட்டணிக்கு தமிமுன் அன்சாரி ஒன்றும் புதியவர் அல்ல. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவே தமிமுன் அன்சாரி கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கி அதிமுக கூட்டணியில் இணைத்துக் கொண்டார். அதன் பிறகும் ஒட்டியும் ஒட்டாமலும் அதிமுக கூட்டணியில் தொடர்ந்த தமிமுன் அன்சாரி கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது வெளியேறி நிபந்தனையற்ற ஆதரவை திமுகவுக்கு வழங்கினார்.
ஆனாலும் அவருக்கு சட்டசபை தேர்தலின் போது திமுக தரப்பில் சீட் கொடுக்கப்படவில்லை. இப்போதும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக பேச முதல்வர் நேரம் கொடுக்கவில்லை. அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டாலும் வரும் டிசம்பர் மாதம் தான் மனிதநேய ஜனநாயக கட்சியின் கூட்டணி நிலைப்பாடு என்ன என்பது தெரியவரும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications