அதிமுகவின் மெகா கூட்டணி கனவு நிறைவேறுதா? வலையில் விழும் மாம்பழம்.. பாமக முடிவு இன்று தெரியும்
சென்னை: அதிமுக - பாமக இடையேயான கூட்டணி உறுதியாகி உள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாமகவுக்கு 7 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை எம்பி. பதவியும் வழங்க அதிமுக தயார் என கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் சனிக்கிழமை வெளியிட்டார். மொத்தம் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்றும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாகத் தமிழ்நாட்டில் 2ஆம் கட்டத்தில் தான் லோக்சபா தேர்தல் வரும். ஆனால், இந்த முறை முதல் கட்டத்திலேயே, அதாவது ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

தேர்தலுக்கு ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்தச் சூழலில் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக எம்எல்ஏ அருள் திடீரென சந்தித்தார்.
அவர்கள் கூட்டணி தொடர்பாகத் தனியாக ஆலோசனை செய்தனர். இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் இப்போது தகவல் வெளியாகியுள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை, அதிமுக மூத்த தலைவர்கள் நேற்று ரகசியமாக தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பாமக கூட்டணி நிலைப்பாடு இன்று அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை எம்பி. பதவியும் வழங்க அதிமுக தயார் என கூறப்படுகிறது. அதிமுகவின் இந்த முடிவை பாமக ஏற்குமா, இல்லையா? என்பது இன்று தெரிந்துவிடும். அதிமுக கூட்டணியில் பாமக இணையும் பட்சத்தில் எடப்பாடியின் மெகா கூட்டணி அமைக்கும் கனவும் நிறைவேறிவிடும் என்று அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications