நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. திமுகவை முந்தி வேகம் எடுக்கும் அதிமுக.. பரபர அறிவிப்பு
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களைப் அளிக்கும்படி அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதற்கான கட்டண விவரங்களை கட்சி தலைமை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இந்த வருட இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகராட்சி, மாநகராட்சி பதவிகளுக்கு நடக்கும் இந்த தேர்தல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே ஆளும் திமுக கொங்கு மண்டலத்தில் தேர்தல் பணிகளை தீவிரமாக தொடங்கிவிட்டது. ஆனால் இதுவரை திமுக விருப்பமனு விண்ணப்ப விநியோகத்தை தொடங்கவில்லை. இந்த நிலையில் நேற்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

அதிமுக
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களைப் அளிக்கும்படி அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர், நகர மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் உறுப்பினர்கள் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

விண்ணப்பம்
26.11.2021 முதல் 28.11.2021 வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கழக அலுவலகங்களில் உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.இதில், சென்னை மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உறுப்பினர்கள் மட்டும், தங்களுக்கான விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களை, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சென்னையைச் சேர்ந்த மாவட்டக் கழகங்களின் மூலம் தலைமைக் கழகத்தில் பெற்று, பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

கட்டணம்
இதற்கு கட்டணமாக மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் ரூ. 5,000. நகர மன்ற வார்டு உறுப்பினர்
ரூ.2,500. பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ரூ.1,500 செலுத்த வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி ஏற்கெனவே விருப்ப மனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகள், அதற்கான கட்டண அசல் ரசீதினை வைத்திருப்பவர்கள் மட்டுமே, அதனை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழக அலுவலகங்களில் சமர்ப்பித்து, கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

விருப்பமனு
சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் விருப்ப மனு பெறுவது சம்பந்தமான விபரங்களை, கழக உடன்பிறப்புகள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும். அதே போல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விருப்ப மனுக்களைப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம், என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications