பாமக தனித்துப் போட்டி எதிரொலி...எந்த சூழலிலும் உதவாத பாஜகவை ஏன் சுமக்கனும்? அதிமுகவில் போர்க்கொடி!
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்த பா.ம.க., உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அதிமுக-பாஜக இடையேயான உறவில் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த சூழ்நிலையிலும் நமக்கு உதவாத பா.ஜ.க.வை இனியும் சுமக்க வேண்டுமா? என அதிமுக சீனியர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் நடைபெறும் 7 மாவட்டங்கள் வடதமிழகத்தில் உள்ளன.
இதனால் இயல்பாகவே அதிமுக கூட்டணியில் பாமக அதிக இடங்களைக் கேட்க வாய்ப்பிருந்தது. ஆனால் அதிமுகவோ பாமகவுக்கு நிச்சயம் விட்டுக் கொடுக்காது என்பதும் தெரியும்.

பாமக-அதிமுக மோதல்
இதனை புரிந்து கொண்டுதான் என்னவோ தனித்தே போட்டியிட என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பா.ம.க. அத்துடன் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் பாமக தரப்பு விமர்சனத்தை முன்வைத்தது. இது அதிமுகவை கொந்தளிக்க வைத்தது. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ ஆகியோர் பாமகவுக்கு எதிராக காட்டமாக பேசினர்.

விளக்கம் தந்த பாமக
இதனால் செய்தியாளர்களை சந்தித்த பாமக செய்தித் தொடர்பாளர் கே.பாலு, அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச அவகாசம் இல்லை. அதனால்தான் தனித்து போட்டியிடுகிறோம். அதேநேரத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கிறோம். அடுத்த தேர்தல்களில் கூட்டணி தொடர்பாக பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றார்.
Recommended Video

திமுக- பாமக உறவு என்ன?
ஏற்கனவே 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி கிடையாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். தற்போது திமுகவுடன் மிக நெருக்கமாகவும் இருந்து வருகிறது பாமக. திமுக கூட்டணியில் பாமக இடம்பெறாவிட்டாலும் அதன் விருப்பங்களை மறைமுகமாகவேனும் நிறைவேற்றக் கூடிய நட்புசக்தியாக உருவாகி இருக்கிறது பாமக. தற்போது தனித்துப் போட்டியிடுவது என்கிற அறிவிப்பு கூட திமுகவின் வியூகத்துக்கு கை கொடுக்கக் கூடியதுதான் என்கிற தகவல்களும் வெளியாகி இருக்கின்றன.

பாஜக நிலைப்பாடு
இந்த நிலையில் பாமகவின் அறிவிப்பை பாஜக சற்றும் எதிர்பார்க்கவில்லையாம். அக்கட்சியின் மாநில நிர்வாகிகளில் ஒரு தரப்பினர் பாமக வெளியேறியதால் அதிமுகவிடம் அதிக சீட்டுகள் வாங்கலாம் என்கின்றனராம். மற்றொரு தரப்பினரோ நாமும் தனித்துப் போட்டியிட்டு அதிமுகவை தனிமைப்படுத்தலாமே என்கின்றனராம். இதனால் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி குறித்து என்ன முடிவு எடுப்பது என்று தேசிய தலைமையிடம் கேட்டுள்ளதாம் தமிழக பாஜக.

எதற்காக பாஜக? கோபத்தில் அதிமுக
அதேபோல் பாமக வெளியேறிவிட்ட நிலையில் பாஜகவை நாம் எதற்கு கட்டிச் சுமக்க வேண்டும்? அந்த கட்சியை கழற்றி விட்டுவிட்டு, தனித்து போட்டியிடலாம் என்று எடப்பாடியிடம் சொல்லி வருகின்றனராம் சீனியர் அதிமுக தலைவர்கள். ஆனால், வழக்கு என்கிற ரீதியில் திமுக நமக்கு நெருக்கடி தருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் ஆதரவையும் நாம் இழக்கணுமா? என்று அவர்களிடம் கேட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதற்கு, திமுக அரசியல் ரீதியாக நெருக்கடி தருகிறது. ஆனால், எந்த சூழலிலும் டெல்லி நமக்கு உதவவில்லை. இது உங்களுக்கே தெரியும். உதவுவார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை. இந்த நிலையில், நாம் எதற்கு பாஜகவை தூக்க வேண்டும்? அதற்கு நெருக்கடி தருகிற திமுகவை சமாதானப்படுத்தும் வழிகளை பார்க்கலாம் என்று யோசனை தெரிவித்திருக்கிறார்களாம் அந்த சீனியர்கள்.












Click it and Unblock the Notifications