அமித்ஷா சொல்றதை நாங்க ஏன் கேட்கனும்! கூட்டணி ஆட்சியெல்லாம் கிடையாது! கட் அண்ட் ரைட்டாக பேசிய நத்தம்!
திண்டுக்கல்: திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் இல்லாவிட்டால் திமுகவுக்கு ஓட்டு சதவீதம் என்பதே கிடையாது, திருமாவளவன் உள்ளிட்ட நபர்கள் தான் திமுகவை காப்பாற்றி வருகின்றனர் எனவும், தமிழகத்தில் அதிமுக ஆட்சி, அதுவும் எடப்பாடி தலைமையிலான ஆட்சி அமையும், அமித்ஷா சொன்னது போல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது கிடையாது என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் எம் எல் ஏக்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் அதிமுக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்," திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் நடந்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்ட அரசு விழாவில் அதிமுக கட்சியின் எந்நாளும் போற்றப்படும் எங்களின் இதய தெய்வம் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் படத்தை குப்பையில் தூக்கி அரசு அதிகாரிகள் எறிந்துள்ளனர்.

ஜெயலலிதாவின் படத்தை யார் எறிய சொன்னது? அரசு அதிகாரிகள் அவர்களாக எரிந்தார்களா? அல்லது அமைச்சர் சொல்லி தூக்கி எறிந்தார்களா? யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. கண்டனத்துக்குரியது. அதிமுக ஆட்சியில் திமுக தலைவர்களின் படத்தை தூக்கி எறிந்தது கிடையாது. உணவுத்துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எடுத்திருந்தால் இவர் மக்களுக்கான அமைச்சராக இருந்திருப்பார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி எடப்பாடி தலைமையிலான ஆட்சி அமையும். கூட்டணி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருப்பார். கூட்டணி ஆட்சி என்பது கிடையாது. அமித்ஷா சொல்லும் பொழுது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் நாங்கள் இணைந்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து அதிக அளவு மரணங்கள் நடைபெற்று வருகிறது. காவல்துறையை கட்டுக்குள் வைத்திருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்ட ஒழுங்கை பற்றி எதையும் கவலைப்படுவது கிடையாது. தமிழகத்தில் என்ன நடைபெறுகிறது என்றும் அவருக்குத் தெரியாது. தொடர்ந்து போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. கொக்கைன், கஞ்சா, போலி மதுபான விற்பனை என தொடர்ந்து போதைமயமாக்கல் நடைபெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் போதை விற்பனை நடைபெறுவதால் சட்டம் ஒழுங்கு என்பது தமிழகத்தில் கேள்விக்குறியாகி உள்ளது.
திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் இல்லாவிட்டால் திமுகவுக்கு ஓட்டு சதவீதம் என்பதே கிடையாது. திருமாவளவன் உள்ளிட்ட நபர்கள் தான் திமுகவை காப்பாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டால் திமுகவுக்கு 10 சதவீத வாக்கு வங்கி கூட இல்லை.
தமிழகத்தில் வரும் 2026ம் ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தலைமையிலான கூட்டணி சிறப்பாக வெற்றி பெறும். மக்கள் அனைவரும் திமுகவுக்கு எதிராக உள்ளனர். மக்களுக்காக திமுக அரசு எந்த ஒரு செயலும் செய்யவில்லை" என கூறினார்.












Click it and Unblock the Notifications