"அம்மா" ஜெயலலிதா கனவை சிதைக்குறாங்க.. அதிமுக போனதால் எங்களுக்கு வருத்தம் இல்லை.. மோடி பளீர் அட்டாக்!
சென்னை: அதிமுக கூட்டணி உடைந்ததால் எங்களுக்கு பிரச்சனை இல்லை, ஜெயலலிதா அவர்களின் கனவை சிதைக்கும் பாவம் செய்கிறவர்கள் என்ற வருத்தம் அதிமுகவினருக்குத்தான் வர வேண்டும். பாஜகவினருக்கு எந்த வருத்தமும் வர வேண்டிய எந்த காரணமும் இல்லை என்று பிரதமர் மோடி தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பெரும் விவாதம், மோதலுக்கு பின்பே .. அதிமுக - பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அப்போது அளித்த பேட்டியில், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. பாஜக கூட்டணி என்பது இனி நடக்காது. 2024 லோக்சபா தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம். அதேபோல் 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைக்க மாட்டோம். எங்கள் கூட்டணி மொத்தமாக முறிந்துவிட்டது, என்றார்.
அதன்பின் இந்த லோக்சபா தேர்தலில் அதிமுக தனியாக கூட்டணி அமைத்தும், பாஜக தனியாக கூட்டணி அமைத்தும் தேர்தலை சந்திக்கின்றன. களத்தில் அதிமுக - பாஜக தலைவர்கள் இடையே கடும் வார்த்தை போர் நடக்கிறது.
பல்வேறு மேடைகளில் முன்னாள் முதல்வர் அதிமுகவின் மறைந்த ஜெயலலிதாவை பிரதமர் மோடி நினைவு கூர்ந்து பேசினாலும் கூட, அதிமுக - பாஜக என்னவோ தேர்தல் களத்தில் மோதிக்கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து பிரதமர் மோடி தந்தி டிவி சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், அதிமுக எங்கள் கூட்டணியில் இல்லாத விஷயத்தை வேறு மாதிரி பார்க்க வேண்டும். 1995ல் ஜெயலலிதா அம்மா உடன் எனக்கு தொடர்பு இருந்தது. அவர் எனக்கு நலன் நண்பர். அதன்பின் எனக்கு முதல்வர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது.

2002 தேர்தலுக்கு பின் பாஜக ஆட்சி மீது குற்றம் எல்லாம் சொன்னாங்க. அந்த சமயத்துல ஜெயலலிதா அம்மா குஜராத் வந்தாங்க. நாங்க பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு வந்தாங்க. பலர் என் மீது விமர்சனம் எல்லாம் வைத்த போது ஜெயலலிதா அதை பற்றி கவலைப்படாமல் என்னை வந்து சந்தித்தார். எங்களுக்குள் அவ்வளவு நட்பு இருந்தது.
இங்கே வருத்தம் யாருக்காவது இருக்க வேண்டும் என்றால் அது அதிமுக நிர்வாகிகளுக்கு மட்டும்தான். எங்களுக்கு வருத்தம் ஏற்படுவதற்கான காரணம் எதுவும் இல்லை. ஜெயலலிதா அவர்களின் கனவை சிதைக்கும் பாவம் செய்கிறவர்கள் என்ற வருத்தம் அதிமுகவினருக்குத்தான் வர வேண்டும். பாஜகவினருக்கு எந்த வருத்தமும் வர வேண்டிய எந்த காரணமும் இல்லை.
பாஜக கூட்டணி இங்கே வலுவாக இருக்கிறது. பல சமுதாய குழுக்களை உள்ளடக்கிய கூட்டணி இந்த கூட்டணி. மலர் செண்டு போல நாங்கள் கூட்டணி அமைத்து உள்ளோம். இதுதான் எங்களின் பலம். மக்கள் எங்களுக்கு அளிக்கும் வாக்கு நேர்மறையான வாக்கு. மக்களுக்கு அளிக்க கூடாது என்பதால் எங்களிடம் வரவில்லை.
மாறாக பாஜகவிற்கு அளிக்க வேண்டும் என்பதற்காக எங்களிடம் வருகிறார்கள். எங்களின் 10 ஆண்டு ஆட்சியில் இளைஞர்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளோம். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளோம். முக்கியமாக பெண்களுக்கு பல நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.
பாஜகவிற்கு ஆதரவாக தேசிய அளவில் மனநிலை உள்ளது. தமிழ்நாட்டில் கூட அது தொடங்கி உள்ளது. மக்கள் இடையே அது ஏற்பட்டு உள்ளது என்று பிரதமர் மோடி தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications