தேர்தல்ங்கிறது அதிமுகவுக்கு சர்க்கரை மாதிரி.. திருவாரூரில் வெற்றி அதிமுகவுக்கே.. ஜெயக்குமார் பேட்டி
சென்னை:அதிமுகவுக்கு தேர்தல் என்பது சர்க்கரை போன்றது, சிலருக்கு பாகற்காய் போன்றது. எனவே திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை அறிவித்து தமிழக அரசியல் கட்சிகளை சுறுசுறுப்பாக்கி இருக்கிறது தேர்தல் ஆணையம். வேட்பாளர் தேர்வு, தேர்தல் பணிக்குழு அமைத்தல், பிரச்சார யுக்தி என அதிமுக, திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன.
ஆதரவு, நடுநிலை, எதிர்ப்பு என பலகட்ட பேச்சுகள் கட்சிகளிடையே தொடங்கி உள்ள நிலையில், கஜா புயலும், அதன் பாதிப்பும் எந்த அளவுக்கு இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை அறுதியிட்டு கூற முடியவில்லை. ஆளும் கட்சிக்கும், அதன் சார்பு கட்சிகளுக்கு எதிர்ப்பாகவும், எதிர்க் கட்சிகளுக்கு சாதகமாக இருக்கும் என்றும் கருத்துகள் பரவி வருகின்றன.

பேட்டியளித்த ஜெயக்குமார்
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-

அதிமுகவுக்கு தேர்தல் சர்க்கரை
தேர்தல் என்பது அதிமுகவுக்கு சர்க்கரை போன்றது; சிலருக்கு பாகற்காய் போன்றது . ஒரு காலத்தில் சென்னை திமுகவின் கோட்டையாக இருந்தது.. இன்று நிலை என்ன?. சென்னையை போல் திருவாரூரிலும் வெற்றி பெறுவோம்.

ஜிஎஸ்டியை குறைத்தது
சினிமாவுக்கான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது தமிழக அரசுதான். தமிழக அரசு எடுத்த முயற்சியால் 23 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் காவல்
ஜெயலலிதா மரணம் குறித்த விவகாரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்தை உதாசீனப்படுத்த முடியாது. அதில் சம்பந்தப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். அரசு தேவை என கருதினால் சிலரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications