அதிமுகவில் நடப்பது ஒன்னும் சரியில்லையே.. உண்மைதான் என்கிறாரே பொன்னையன்!
சென்னை: தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள், லோக்சபா தேர்தல் கூட்டணிக்காக ஆயத்தப்பட்டுக் கொண்டுள்ள சூழ்நிலையில் ஆளும்கட்சியான அதிமுகவில், வேறு ஒரு பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பிரதான எதிர்க்கட்சி திமுக தனது கூட்டணியை வலுப்படுத்த முயற்சியில் இப்போதே இறங்கிவிட்டது.
கடந்த வாரம் முழுக்க மீடியாக்களில் திமுக கூட்டணி குறித்த செய்திகள்தான் பிரதான இடத்தைப் பிடித்திருந்தன. துரைமுருகனின் பேட்டியும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் அடுத்தடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியது உள்ளிட்டவை அந்த கட்சியை லைம் லைட்டில் வைத்திருந்தது.
யாரை முதல்வராக போடலாம்.. ஆளை காட்டுங்க, இல்லை பேரைச் சொல்லுங்க!
கூட்டணி ஆயத்தம்
ஏற்கனவே, திமுக கூட்டணியில், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் உள்ள நிலையில், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை கூட்டணியில் இணைவதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன. இதற்கான பாசிட்டிவ் சிக்னல் திமுக தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில், இதை தேர்தல் கூட்டணியாக ஒரு மாற்றுவதற்குத் தேவையான ஆயத்தப்பணிகளை திமுக எடுத்து வருகிறது.
தினகரன் சூறாவளி பயணம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை பொறுத்தளவில், அதன் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக முகாமிட்டு, நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். மறைமுகமாக, காங்கிரஸ் கட்சிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தூதுவிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமல்ஹாசன் விசிட்
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன், திமுகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்து விட்டார். இதையடுத்து காங்கிரசுடன் நெருக்கம் காட்டி வருகிறார். டெல்டா மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு புயலால் பாதித்த மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். அரசை விமர்சனம் செய்து கருத்துக்களை கூறி வருகிறார். இப்படி ஒவ்வொருவரும் தங்களது பணிகளில் மும்முரமாக இருக்கும் நிலையில், அதிமுகவிற்குள் கோஷ்டிப் பூசல் நிலவுவது வெளியே வந்துள்ளது.
ஐடி விங்க்
அதிமுகவின் தகவல் தொடர்பு பிரிவில் தான் இந்த தகராறு நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டபோது அதிமுக தகவல் தொடர்பு பிரிவின் முக்கிய நிர்வாகிகள் அவருடன் இணைந்து சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி அணி இணைந்து விட்டாலும்கூட இந்த தகவல் தொழில்நுட்ப பிரிவில் உள்ள நிர்வாகிகள் மனதளவில் இணையவில்லை என்று பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.
பொன்னையனும் உறுதி
இதுகுறித்து, அந்த பத்திரிகைக்கு பொன்னையன் அளித்துள்ள பேட்டியில், பிரச்சனை இருப்பது உண்மைதான். நாங்கள் அதை தீர்த்து வைப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். ஏற்கனவே தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவரை நியமித்து உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். அதேநேரம் திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகம் கார்பொரேட் அலுவலகம்போல செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமிழகத்தில், தகவல் தொழில்நுட்ப பிரிவு தொடங்கிய முதல் பெரிய கட்சி அதிமுகதான் என்ற போதிலும், இப்போது அங்கு நடக்கும் இந்த பிரச்சினை காரணமாக இணையதளங்களில் செய்யப்படும் பிரச்சாரத்தின் வேகம் முடங்கியுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.