மீண்டும் பாஜக கூட்டணி.. இனியும் ராயபுரம் செட் ஆகாது.. மயிலாப்பூர் தொகுதிக்கு மாறும் ஜெயக்குமார்?
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் இருந்து மாறி மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ராயபுரம் தொகுதியில் மீனவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிகமாக இருப்பதால், அதிமுக - பாஜக கூட்டணிக்கு மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது. இதனால் ஜெயக்குமார் முன்னெச்சரிக்கையாக தொகுதியை மாற்ற முடிவு செய்திருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், ஓராண்டுக்கு முன்பாகவே அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணி இறுதியான நாளில் இருந்தே, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அமைதியாகிவிட்டார். ஏனென்றால் ராயபுரம் தொகுதியில் 4 முறை தொடர்ந்து வென்ற ஜெயக்குமார், பாஜக உடனான கூட்டணியால் தோல்வியடைந்தேன் என்று வெளிப்படையாக கூறி இருந்தார்.

சோகமான ஜெயக்குமார்
இதனால் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான போதும் கூட, ஜெயக்குமாரின் பழைய பேட்டிகள் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு ட்ரெண்டாகியது. இந்த நிலையில் ராயபுரம் தொகுதியை பொறுத்தவரை மீனவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிகம் இருக்கிறது. இதனால் ராயபுரம் தொகுதியில் மீண்டும் ஜெயக்குமார் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராயபுரத்தில் ஜெயக்குமார் செல்வாக்கு
1991ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இருந்து ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு வரும் ஜெயக்குமார், 1996 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளார். ராயபுரம் தொகுதியை தனது கோட்டை போல் வைத்திருந்த ஜெயக்குமாருக்கு, அமைச்சர், சபாநாயகர் என்ற பதவிகளும் அடுத்தடுத்து தேடி வந்தன. அதற்கு ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமாருக்கு இருந்த செல்வாக்கு தான்.
மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி
ஆனால் 2021ஆம் ஆண்டி ஐட்ரீம் மூர்த்தி வென்றதால், ஜெயக்குமாரால் சட்டமன்றத்திற்கு செல்ல முடியவில்லை. அதற்கு பாஜக உடனான கூட்டணியே காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ராயபுரம் தொகுதியில் போட்டியிடாமல், தொகுதியை மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராயபுரம் டூ மயிலாப்பூர்
ராயபுரத்திற்கு பதிலாக மயிலாப்பூர் தொகுதி களமிறங்கலாம் என்று ஜெயக்குமார் ஆலோசிப்பதாக அவரின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். சென்னையில் அதிமுகவின் செல்வாக்கு கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்து வரும் சூழலில், இம்முறை எழுச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு இடையிலான மோதல், இதுவரை குறைந்ததாக தெரியவில்லை. இதனால் அதிமுக எழுச்சி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications