வேலூரை பிடிச்சே ஆகணும்.. படு தீவிரத்தில் அதிமுக .. அதிரடி நடவடிக்கைகள் ஸ்டார்ட்!
வேலூர் தொகுதியில் வெற்றி பெற முதல்வர் தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார்
Recommended Video
சென்னை: வேலூர் தொகுதியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதுதான் இப்போதைக்கு எடப்பாடி அரசின் தீவிர முயற்சியாக இருக்கிறது!
வரும் 5-ம் தேதி வேலூரில் நின்றுபோன எம்பி தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக ஏற்கனவே அறிவித்த கூட்டணி வேட்பாளரான ஏசி சண்முகம் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கூட்டணி வேட்பாளர் என்பதைவிட, ஏசிஎஸ் இரட்டை இலையில் நிற்கிறார் என்பதுதான் அதிமுகவுக்கு மிக முக்கியமான விஷயமாக உள்ளது.

முதல்வர்
ஏற்கனவே இடைத்தேர்தல்களில் கவனம் செலுத்த போயிதான், எம்பி தேர்தலில் கோட்டை விட்டு விட்டதை அதிமுக தலைமை நன்றாகவே உணர்ந்துள்ளது. இப்போது கிடைத்துள்ள இந்த ஒரு சான்ஸையும் விட்டு விடக்கூடாது என்பதே எடப்பாடியாரின் முழு எண்ணமாக உள்ளது.

நியமனம்
இதற்காக சில அஸ்திரங்களையும் அவர் கையில் எடுக்கவே செய்தார். முதல் வேலையாக, தேர்தல் பொறுப்பாளர்களாக முக்கிய, மூத்த தலைகள் நியமனம் செய்யப்பட்டனர். அடுத்ததாக, வேலூர் தொகுதியில் இருந்து முகமது ஜானை ராஜ்ய சபா எம்பி ஆக்கி உள்ளார்.

அன்புமணி
மூன்றாவதாக, வட மாவட்டமான வேலூர் தொகுதி, பாமகவின் செல்வாக்கு நிறைந்தது. இதை கருத்தில் கொண்டுதான் அன்புமணிக்கும் ராஜ்யசபா சீட் தரப்பட்டு அவரும் தற்போது எம்பியாகியுள்ளார். இது எல்லாமே எடப்பாடியார் சரியாக காய் நகர்த்தி கொண்டு போன செயல்பாடுகள்.

பாமக
ஏசி சண்முகத்தை வெற்றி பெற வைத்து டெல்லிக்கு அனுப்பிவிட்டால் எடப்பாடியாருக்கு பல வகையில் சாதகமே! பாஜகவின் அதிருப்தியில் இருந்து தப்பிக்கலாம், கூட்டணிக்குள் வலிமை ஏற்படும், தமிழகத்தில் தென் மாவட்டங்கள் சார்பாக ஓபிஎஸ் மகன் என்றால், வட மாவட்டங்கள் சார்பாக ஏசிஎஸ்.. என்பன போன்ற நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

அமமுக
இது எல்லாவற்றிற்கும் மேலாக, சென்ற முறை அமமுக அங்கு போட்டியிட்டது. இப்போது வேலூரில் அமமுக போட்டியிடவில்லை. அத்துடன் நிறைய அமமுக நிர்வாகிகள் இப்போது அதிமுக தரப்பில் இணைந்துள்ளனர். இந்த சாதகமான விஷயங்களை எல்லாம் உள்ளே இறக்கிதான் அதிமுக வேலூரில் வெற்றி பெற வேலை பார்த்து வருகிறது!

விஜயகாந்த்
இதை விட இன்னொன்னும் இருக்கிறது. அது தேமுதிக. என்னதான் விஜயகாந்த் ஓய்ந்து போய் இருந்தாலும், பிரேமலதா மீதான அதிருப்தி அலை வீசி வந்தாலும் கூட வேலூரில் தேமுதிகவுக்கும் கொஞ்சம் உயிர் இருக்கிறது. அதை விட முக்கியமாக, லோக்சபாதேர்தல் கூட்டணி சமயத்தில் துரைமுருகன் தங்களது ரகசியப் பேச்சுக்களை பேரத்தை போட்டு உடைத்து விட்டதால் கடுப்பாக உள்ள பிரேமலதா நிச்சயம் துரைமுருகன் மகனை தோற்கடிக்க தீவிரம் காட்டலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

திமுக
அந்த வகையில், வேலூர் தொகுதியில் அதிமுகவுக்கு சாதகமாக நிறைய இருந்தாலும் கூட, திமுக தரப்பு, மக்களை நம்பி களத்தில் உள்ளது. பார்க்கலாம். வேலூர் ஜல்லிக்கட்டில் வெல்லப் போவது யார் என்பதை.












Click it and Unblock the Notifications