சென்னை விமான சாகசத்தால்.. அதிமுக ஜெயக்குமாருக்கு வந்த சோதனையை பார்த்தீங்களா!
சென்னை: விமானப்படை ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதனால் சென்னை போக்குவரத்து ஸ்தம்பித்தது. விமான சாகச நிகழ்ச்சிக்கு சென்றதால் அதிமுக கூட்டத்துக்கும் போதிய கூட்டம் வரவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதைப் பார்ப்பதற்காக சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். இந்த நிகழ்வு லிம்கா கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது.

இந்த நிகழ்வால் சென்னை மாநகரம் முழுவதும் ஸ்தம்பித்தது. பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நடந்து செல்வதற்கு கூட மக்கள் சிரமப்பட்டனர். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். காவல்துறையும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதிக கூட்டத்தால் மெரினா சுற்றுவட்டாரங்களில் மொபைல் நெட்வொர்க்கும் முடங்கியது. சென்னை இயல்பு நிலைக்கு திரும்பவே நீண்ட நேரம் ஆனது. விமானப்படை சாகச நிகழ்ச்சியால் அரசியல் கட்சி கூட்டங்களுமே பாதிக்கப்பட்டுள்ளன.
அதிமுக சார்பில் வட சென்னைக்கு உட்பட்ட பகுதியில் புதிய உறுப்பினர்கள் கூட்டம் ராயபுரம் பகுதியில் நடந்தது. அதில் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது பல இருக்கைகள் காலியாக இருந்தன. இதுகுறித்து ஜெயக்குமார் பேசுகையில், எப்போது ஆலோசனை கூட்டம் நடத்தினாலும், ஒரு ஆயிரம் பேராவது கலந்து கொள்வார்கள். நாம் பத்து நாட்களுக்கு முன்பே இந்தக் கூட்டத்துக்கான ஏற்பாட்டை செய்துவிட்டோம்.
திடீரென்று மெரினா கடற்கரையில் விமானப்படை, ஏர்ஷோ நிகழ்ச்சியை நடத்திவிட்டது. அதனால் எல்லாரும் அதற்கு போய்விட்டார்கள். கூட்டம் சற்று குறைவாக இருந்தாலும், ஏர்ஷோவை விட கட்சி தான் முக்கியம் என்று இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
அதிமுக சாதாரண சக்தி இல்லை. இது மிகப்பெரிய சக்தி. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் உருவாக்கி மாபெரும் சக்தி இந்த கட்சி. இரண்டு கோடி தொண்டர்களை கொண்டிருக்கிறது. நாம் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை. எவ்வளவு பெரிய மலையையும் நகர்த்தக் கூடிய சக்தி, அதிமுக செயல்வீரர்களுக்கு மட்டுமே உள்ளது. என்று பேசினார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கு 10 சதவீதம் வாக்கு குறைந்திருப்பதாக கூறியிருந்தார். இதற்கு அந்தக் கட்சியினரே விமர்சனம் வைத்தனர். இந்நிலையில் ஜெயக்குமாரின் கருத்தும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
முக்கியமாக திமுக மற்றும் பாஜகவினர் அதிமுகவை கலாய்த்து வருகின்றனர். எப்படி இருந்த கட்சிக்கு இந்த நிலைமையா. கூட்டம் வரவில்லை என்று எப்படியெல்லாம் சமாளிக்கிறார்கள். கூட்டத்தை மெரினா கடற்கரை அருகே வைத்திருக்கலாம் என்று சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications