உலகமே வியக்கும்.. ஐஸ்வர்யா வீட்டில் அபேஸ் செய்த ஈஸ்வரியின் உருட்டுக்கள் என்ன தெரியுமா?
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் நகை, பணத்தை திருடிய பெண், அதை வைத்து நிலம் வாங்கி வீடு கட்டிய போது, கணவரிடமும், உறவினர்களிடமும் தான் ஐஸ்வர்யாவின் பினாமி என்று கூறியுள்ளார். திருடிய நகைகளை விற்று அதில் தனது மகளுக்கு மளிகைகடை வைத்துக்கொடுத்ததோடு, அங்கிருந்து தனுஷ் வீட்டிற்கு மாதந்தோறும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மளிகைபொருட்கள் சப்ளை செய்து வந்து உள்ளார்.
ஐஸ்வர்யா தனது வீட்டின் லாக்கரை கடந்த மாதம் திறந்து பார்த்தபோது அந்த பெட்டியில் இருந்த பாரம்பரிய நகைகள் சுமார் 60 பவுனை காணவில்லை. தங்கம் மற்றும் வைர நகைகள் அதில் இருந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா, லாக்கரில் இருந்த நகைகள் மாயமானது பற்றி காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளிக்கப்பட்டது.
நான் லாக்கரில் நகைகளை வைத்திருந்ததும், அதன் சாவி எங்கே இருக்கிறது என்பது என்னுடைய வீட்டில் பணியாற்றும் மூன்று பேருக்கு நன்றாக தெரியும். நான் இல்லாத நேரத்தில் அவர்கள் சென்று வந்துள்ளனர். அதனால் அவர்களை விசாரிக்க வேண்டும் என்று அந்த புகார் கடிதத்தில் கூறியிருந்தார்.

வீட்டு பணிப்பெண் கைது
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய ரகசிய விசாரணையில், ஈஸ்வரி என்ற பணிப்பெண் மீது சந்தேகம் எழுந்தது. அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். திருடிய நகைகளை விற்று சோழிங்கநல்லூரில் நிலம் வாங்கியதும், அதற்கு உடந்தையாக ரஜினியின் டிரைவர் இருந்ததும் தெரியவந்துள்ளது.

நகைகள் பறிமுதல்
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடியதாக பெண் பணியாளர் ஈஸ்வரி, ஓட்டுனர் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஈஸ்வரியிடம் இருந்து 103 சவரன் நகை மற்றும் சுமார் 95 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நில பத்திரம், 30 கிராம் வைர நகைகள் 4 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

திருடு போன நகைகள் எவ்வளவு?
திருடப்பட்ட நகைகள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணத்தின் போது ரஜினிகாந்த் சீதனமாக கொடுத்த நகைகள் என்பதால்,பெரிய நிகழ்வுகளின் போது மட்டுமே அந்த நகைகளை அணிவதற்காக லாக்கரில் வைத்து இருந்தனர். இதனால் நகைகளை பார்க்காமல் இருந்துள்ளார். திருமணத்திற்கு பிறகு மற்றும் நண்பர்கள் அன்பளிப்பாக அளித்த நகைகள் ஆகியவற்றையும் லாக்கரில் வைத்து இருந்ததால், எவ்வளவு நகைகள் இருந்தது என முறையாக கணக்கு தெரியாமல் இருந்துள்ளது. இதனால், புகாரில் தொலைந்து போன நகைகள் குறித்த முறையான தகவலை ஐஸ்வர்யா தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

திருடிய நகையில் திருமணம்
ஈஸ்வரி மற்றும் அவரது கணவர் அங்கமுத்து ஆகியோரை கைது செய்து எம்ஜிஆர் நகரில் வைத்து தனித்தனியாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியானது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மூலமாக மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்த ஈஸ்வரி, இரண்டாவது மகளுக்கு தொழில் தொடங்க மளிகைக்கடையையும் கணவர் அங்கமுத்துவிற்கு அதிக முதலீட்டுடன் கூடிய காய்கறி கடையும் வைத்துக் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மளிகை, காய்கறி சப்ளை
ஐஸ்வர்யாவிடம் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஈஸ்வரி, நடிகர் தனுஷ் வீட்டிற்கு மாதம் மளிகை காய்கறியை தனது மகள் மற்றும் கணவர் கடைகளில் இருந்து சுமார் 50 ஆயிரம் ரூபாய்க்கு சப்ளை செய்தது தெரியவந்துள்ளது. சோழிங்கநல்லூரில் வீடு போன்றவை வாங்கும் போது இவ்வளவு பணம் ஏது என்று கணவன் கேட்டபோது அதற்கும் ஒரு பொய்யை சொல்லி சமாளித்துள்ளார்.

கணவர் வாயை அடைத்த ஈஸ்வரி
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பெயரில் பினாமியாக வாங்கியதாகவும் வெளி உலகத்திற்கு இது நமது வீடு எனவும். உண்மையில் இந்த வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு சொந்தமானது எனவும் கூறி கணவனின் வாயை அடைத்த ஈஸ்வரி, இது குறித்து யாரிடமும் வெளியில் சொல்லக்கூடாது எனவும் கூறியுள்ளார். இதனால் வீட்டில் இருந்தவர்களுக்கு சந்தேகம் வராத நிலையில் ஈஸ்வரி செயல்பட்டுள்ளார்.

டிரைவரிடம் கொடுத்து விற்பனை
திருடிய நகைகளை டிரைவர் வெங்கடேஷிடம் கொடுத்து நகைகளை 20 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். அதில் வெங்கடேசனின் பங்காக 9 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். கணவன் பெயரில் 350 கிராம் தங்க நகைகளை வங்கியில் அடமானம் வைத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. புகாரில் இருப்பதைவிட அதிகப்படியான நகை பணம் கைப்பற்றப்பட்டதால் , எவ்வளவு நகைகள் கொள்ளையடித்துள்ளார்கள் என்பது குறித்தும் புகாரில் தெளிவாக குறிப்பிட முடியவில்லை.

வேறு எங்கு திருட்டு
ஐஸ்வர்யாவின் வீடு தவிர நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் வீடுகளிலும் நகை, பணத்தை ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் திருடியுள்ளார்களா ? எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் வீட்டில் நகைகள் மற்றும் பணம் வேறு ஏதேனும் மாயமாகியுள்ளதா? எவ்வளவு நகைகள் மாயமாகியுள்ளது என்பது குறித்தும் காவல்துறையினர் விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காவலில் எடுக்க திட்டம்
கடந்த 2006 முதல் ஐஸ்வர்யா வீட்டில் வேலை பார்க்கும் ஈஸ்வரி மற்றும் சுமார் 10 வருடமாக டிரைவாக பணிபுரியும் வெங்கடேசன் இருவரும் கூட்டு சேர்ந்து எத்தனை வருடம் நகைகளை திருடியுள்ளனர் என்றும் இத்தனை வருட காலம் சந்தேகம் வராமல் திருடியது எப்படி என்பது குறித்து எல்லாம் விரிவாக விசாரணை நடத்த காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஈஸ்வரி மீது ஏற்கனவே ஒரு வழக்கு இருப்பதாகவும் அது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications