“ஜென்டில்மேன் டிரைவர்” விருதை வென்ற நடிகர் அஜித் குமார்.. பெருமையுடன் ஷாலினி பகிர்ந்த படம்!
சென்னை: நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமாருக்கு இந்த ஆண்டின் ஜென்டில்மேன் டிரைவர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இத்தாலியில் வழங்கப்பட்ட இந்த விருது குறித்து அஜித்தின் மனைவி ஷாலினி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
பிரெஞ்சு தொழிலதிபரும், கார் பந்தய வீரருமான மறைந்த பிலிப் சாரியோல் (Philippe Charriol) நினைவாக இத்தாலியின் வெனிஸ் நகரில் வழங்கப்படும் 'ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025' (Gentleman Driver of the Year 2025) விருதை, இந்திய நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் பெற்றுள்ளார்.

பிலிப் சாரியோல் மோட்டார்ஸ் போர்ட்ஸ் குழுமம் மற்றும் SRO மோட்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் இணைந்து இத்தாலி தலைநகர் வெனிஸில் 'ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025' என்ற விருதை நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமாருக்கு வழங்கி கெளரவித்துள்ளது.
இந்த விருது, பொழுதுபோக்கிற்காகவும் ஆர்வத்திற்காகவும் பந்தயத்தில் ஈடுபடும் வீரர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு சர்வதேச அளவில் மோட்டார் ஸ்போர்ட்டில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டியதற்காக அஜித் குமாருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
அஜித்தின் மனைவி ஷாலினி, இந்தச் செய்தியை உறுதிப்படுத்தி, வெனிஸ் நகரில் நடந்த விருது விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். பிலிப் சாரியோல் நினைவாக வெனிஸில் வழங்கப்படும் இந்தாண்டுக்கான ஜென்டில்மேன் டிரைவர் விருது வென்ற எனது கணவரின் அருகில் நிற்பதில் பெருமை அடைகிறேன் எனக் கூறியுள்ளார்.
நடிகர் அஜித் குமார், சினிமாவில் நடிப்பதைத் தாண்டி தனக்கு மிகவும் பிடித்த கார் பந்தயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். ஐரோப்பாவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்தின் அணி சாதனை படைத்தது. சமீபத்தில், இந்திய அரசின் பத்மபூஷன் விருதை அஜித் பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications