மீண்டும் உயரும் கொரோனா கேஸ்கள்.. சென்னையில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்.. வெறிச்சோடிய தியாகராய நகர்
சென்னை: கொரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக தியாகராய நகர் உட்பட நகரின் பல முக்கிய பகுதிகள் வெறிச்சோடி காட்சி அளிக்கிறது.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் முதல் சுமார் 65 நாட்களாக வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது. மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு விரைவாகக் கட்டுக்குள் வர இங்கு அமல்படுத்தப்பட்டிருந்த கடுமையான ஊரடங்கே முக்கிய காரணம் எனச் சொல்லப்பட்டது.
தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
இந்தச் சூழ்நிலையில் கடந்த மூன்று நாட்களாக மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் 23 மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்திருந்தது.
தலைநகர் சென்னை
தலைநகர் சென்னையில் கடந்த 27ஆம் தேதி வைரஸ் பாதிப்பு 109ஆகக் குறைந்திருந்த நிலையில், தற்போது வைரஸ் பாதிப்பு நேற்று மீண்டும் 204ஆக உயர்ந்துள்ளது. கொரோனா 2ஆம் அலையைப் போல நிலைமை கையை மீறிச் செல்லும் வரை காத்திருக்காமல், இப்போது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டனர். வைரஸ் பாதிப்பு அதிகரிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் உணவருந்த அனுமதித்தால் அபராதம் விதிக்கப்பட்டு, தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.
கோயில்களில் அனுமதி ரத்து
அதேபோல ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு தமிழ்நாட்டிலுள்ள கோவில்களில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக மதுரை, சென்னை மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
9 இடங்கள்
இவை தவிரச் சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் நேற்று முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. ரங்கநாதன் தெரு வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரையிலான பகுதிகள், புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை பகுதிகள், ராயபுரம் மார்க்கெட், அமைந்தகரை மார்க்கெட் பகுதிகள், கொத்தவால்சாவடி மார்க்கெட், ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதிகள் உட்பட 9 இடங்களில் வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தியாகராய நகர்
பொதுவாகவே, தியாகராய நகரில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அலை மோதும். கொரோனா பரவ தொடங்கிய பிறகு மக்கள் கூட்டம் சற்றே குறைந்திருந்தது. இருப்பினும், கொரோனா 2ஆம் அலைக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகள் காரணமாக தியாகராய நகரில் மக்கள் கூட்டம் கணிசமாகவே அதிகரித்திருந்தது.
வெறிச்சோடிய தியாகராய நகர்
இந்தச் சூழலில் சென்னை மாநகராட்சியின் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக நேற்று முதல் தியாகராய நகரில் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால், வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் தியாகராய நகர் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. காலையில் சில கடைகள் திறக்கப்பட்டன. இருப்பினும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அங்கு வந்து கடைகளை மூட அறிவுறுத்தியதால் மாலையிலேயே கடைகள் மீண்டும் மூடப்பட்டன.