அப்பா காரைக்கால் போக.. தைலாபுரத்துக்குள் எண்ட்ரி கொடுத்த ராமதாஸ்! பரபரப்பான பாமக! என்னவாம்?
திண்டிவனம்: பாமகவில் தந்தை மகன் மோதல் உச்சத்தை தொட்டுள்ள நிலையில் திடீரென அன்புமணி ராமதாஸ் இன்று இரவு தைலாபுரம் இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். தந்தை ராமதாஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக காரைக்கால் சென்றுள்ள நிலையில் அவர் வீட்டில் இல்லாதபோது அன்புமணி தைலாபுரம் இல்லம் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர்களிடம் எதுவும் கருத்து தெரிவிக்காமல் அன்புமணி ராமதாஸ் தோட்டத்திற்குள் சென்றுள்ளார்.
வரும் 2026 சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக மற்றும் அதிமுக தேர்தல் வேலைகளை தற்போதே தொடங்கிவிட்டன. இரு கட்சிகளும் மாநில முழுவதும் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டங்களை தொடங்கியுள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலினும் ஒன்றிணைவோம் வா என்ற பெயரில் மக்களை சந்தித்து வருகிறார்.

தந்தை மகன் மோதல்
தமிழக எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியும் மாவட்ட அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் பாமக இந்த முறை திமுக பக்கம் போகுமா அல்லது அதிமுக - பாஜக கூட்டணியில் பக்கம் போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது பாமகவில் தந்தை மகன் மோதல் பூதாகரமாக வெடித்துள்ளது. லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த பாமக இந்த முறை பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு ராமதாஸ் ஒத்துக்கொள்ளவில்லை என்றும், ஆனால் மகன் அன்புமணி பாஜகவுடன் கூட்டணி வைக்க அழுத்தம் கொடுத்ததாலும் போன்ற பல்வேறு விவகாரங்களில் தந்தை மகன் மோதல் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
நானே கட்சி தலைவர்
இதையடுத்து அன்புமணியை செயல் தலைவர் ஆக பதவி இறக்கம் செய்தார் ராமதாஸ். தொடர்ந்து அவரால் எனக்கு மன வருத்தம் தான் வருகிறது. பாஜகவுடன் கூட்டணி வைக்க என் காலில் விழுந்தார் என அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன் வைத்தார். எனினும் இதற்கு அன்புமணி எந்தவித கருத்துக்களையும் கூறாமலே இருந்து வந்தார்.
கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் நான்தான் எனவே எனக்குத் தான் நிர்வாகிகளை நீக்கும் மற்றும் சேர்க்கும் அதிகாரம் இருக்கிறது என சமீபத்தில் டெல்லி சென்ற அன்புமணி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அன்புமணியின் பதவிக்காலம் முடிந்ததாகவும், நானே கட்சி தலைவராக தொடர்கிறேன் என்றும் ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார்.
தைலாபுரத்தில் அன்புமணி
என் பெயரை பயன்படுத்தக் கூடாது. இன்ஷியலை மட்டும் வேண்டுமானால் பயன்படுத்திகொள்ளலாம் என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து ராமதாஸ் பாமக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக காரைக்கால் புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு ராமதாஸ் முகாமிட்டுள்ள நிலையில், திண்டிவனத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லம் உள்ள தைலாபுரம் தோட்டத்திற்கு அன்புமணி வருகை தந்தார்.
தந்தை மகன் மோதலுக்கு பிறகு இரண்டாவது முறையாக இன்று இரவு 8 மணியளவில் தைலாபுரத்திற்கு அன்புமணி வருகை தந்துள்ளார். தனது தாய் சரஸ்வதியை பார்ப்பதற்காக தைலாபுரம் வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து தைலாபுரம் வருவதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் இன்று ராமதாஸ் வீட்டில் இல்லாத நிலையில் அங்கு வந்துள்ளார்.
திடீர் வருகை ஏன்?
டாக்டர் ராமதாஸ் காரைக்கால் சென்றுள்ள நிலையில் அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர்களிடம் எதுவும் கருத்து தெரிவிக்காமல் அன்புமணி ராமதாஸ் தோட்டத்திற்குள் சென்றுள்ளார். தாயின் சந்திப்பு பிறகு தந்தை மகன் இருவரும் ஒன்று சேர்வார்களா என்று பாமக தொண்டர்கள் எதிர்பார்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications