உச்சமடையும் மோதல்! எடப்பாடியின் உருவப்படம் எரிப்பு.. கோவில்பட்டி பாஜக இளைஞரணி உறுப்பினர்கள் கைது
எடப்பாடி பழனிசாமியின் படங்களை பாஜகவினர் எரித்துள்ளனர்.
சென்னை: பாஜகவின் மாநில நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்ததைக் கண்டித்து, எடப்பாடியின் படம் எரிக்கப்பட்டதாக பாஜக இளைஞரணியினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில் அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவும் அதிமுகவும் இணைந்தே கூட்டணியில் பயணித்து வருகிறது. கடந்த 2019 மக்களவை தேர்தல், அதைத் தொடர்ந்து நடந்த 2021 சட்டசபைத் தேர்தல்களை இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தே சந்தித்தது.
இருப்பினும், கடந்த சில நாட்களாகவே இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாஜக நிர்வாகிகள் வரிசையாக விலகி அதிமுகவில் இணைவதே இந்த பூசல்களுக்குக் காரணமாக இருக்கிறது.

பாஜக நிர்வாகிகள் விலகல்
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல்குமார் அண்மையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்குப் பிறகு பல பாஜக நிர்வாகிகள் அங்கிருந்து விலகி வருகின்றனர். பாஜகவின் ஓபிசி அணியின் மாநிலச் செயலாளர் அம்மு என்கிற ஜோதி அதிமுகவில் இன்று இணைந்துள்ளார். மேலும், வரும் பல பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.

பரபர ட்வீட்
இதற்கிடையே பாஜக தலைமைக்கும் அதிமுக தலைமைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தச் சூழலில் பாஜக நிர்வாகிகள் விலகல் குறித்து அமர் பிரசாத் ரெட்டி ரெட்டி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சாடும் வகையில் ட்வீட் செய்திருந்தார். அவர் தனது ட்விட்டரில், "கூட்டணிக் கட்சியான அதிமுக இம்மாதிரியான செயலை செய்திருக்கக் கூடாது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா?

தக்க பாடம்
இனி அந்தச் சொல்லை இரு கட்சியினரும் பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை. நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கட்சி மாறிய கொள்கையற்ற பிழைப்புவாதிகளை வைத்து அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா? கொங்கு மண்டலத்தை தங்கள் கோட்டையாக கருதிய அதிமுகவினருக்கு கொங்கு மண்டல வாக்காளர்கள் தக்க பாடத்தை புகட்டியுள்ளனர்.

மீண்டு எழ அறிகுறியே இல்லை
66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றது மீண்டு எழுவதற்கான அறிகுறி இல்லை. கோட்டையைப் பிடிப்பதற்கான கனவை மறந்து விடுங்கள். அண்ணாமலை தலைமையிலான அரசு தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் பாஜக தான் தமிழகத்தின் எதிர்காலம் " என்று பதிவிட்டிருந்தார். அமர் பிரசாத் ரெட்டி தனது ட்வீட்டில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை எங்கும் குறிப்பிடவில்லை என்றாலும் கூட அவரை தான் சொல்கிறார் என்பதை அனைவருக்கும் தெரிந்தது.

பதிலடி
இதனிடையே இந்த கருத்திற்கு அதிமுக ஐடி விங்கின் சிங்கை ராமசந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், "நோட்டாவை விட குறைவாக வாக்குகள் வாங்கி வந்த நிலையில், 2021 தேர்தலில் பாஜக எப்படி எம்.எல்.ஏ.க்களை வென்றது என்பதே இதற்கான பதில். அதிமுக யார் தயவும் இன்றி, தனித்துப் போட்டியிட்டுத் தேர்தல்களை வென்ற இயக்கம். நிர்வாகிகள் வெளிவந்ததை மறைக்க அதிமுகவை வளர்க்க பாஜகவின் ஆட்கள் தேவை என்பது நகையே!" என்று பதிவிட்டிருந்தார்.

உருவப்படம் எரிப்பு
இந்தச் சூழலில், கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பாஜக இளைஞரணியினர் எரித்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் மாநில நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்ததைக் கண்டித்து, எடப்பாடியின் படம் எரிக்கப்பட்டதாக பாஜக இளைஞரணியினர் தெரிவித்துள்ளனர் மேலும், கூட்டணி தர்மத்தை மீறி பாஜக நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உருவப்படத்தை எரித்ததாகத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications