உதயநிதி அமைச்சரான அதே நேரத்தில்.. அங்கே யாரு? அண்ணாமலையா?.. அவசரமாக நடந்த மீட்டிங்.. விழுந்த டோஸ்?
சென்னை: நேற்று விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற அதே நேரத்தில் பாஜக சார்பில் முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தப்பட்டு உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கியமான சில விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு அமைச்சரவை நேற்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நேற்று தமிழ்நாடு அமைச்சராக பதவி ஏற்று உள்ளார். இன்று இவருக்கு விளையாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் இன்று அளிக்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலினின் சிறப்பு செயல்திட்ட செயலாக்க துறையும் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
மொத்தம் முதல்வர் ஸ்டாலினையும் சேர்த்து நேற்று 11 அமைச்சர்களின் இலாக்காக்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
துபாய் ஓட்டல் “சீக்ரெட்”.. அண்ணாமலை பதில் சொல்வார்! பாஜகவின் புதிய “லீக்”.. குமுறும் காயத்ரி ரகுராம்
என்ன நடந்தது?
உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆக்கப்படுவதற்கு முன்பாகவே அதை பாஜக கடுமையாக எதிர்த்து வந்தது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனால் திமுக ஆட்சி கவிழ்ந்துவிடும். மகாராஷ்டிராவில் நடந்தது போல இங்கே ஆட்சி கவிழும் நிலை ஏற்படும் என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் நேற்று உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான சில நிமிடங்களில் பாஜக சார்பாக முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. பாஜக தலைமையகமான கமலாலயத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
ஆலோசனை
இந்த ஆலோசனை கூட்டத்தில் பல முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டு உள்ளன. உதயநிதி ஸ்டாலின் மீது எப்படி விமர்சனங்களை வைக்கலாம். அவரை எப்படி எதிர்கொள்ளலாம். அவருக்கு எதிராக எப்படி காய் நகர்த்தலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறதாம். இதை வாரிசு அரசியல் என்று ஏன் விமர்சனம் செய்ய வேண்டும், தொடர்ந்து உதயநிதியை தாக்கி பேச வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை இதில் பாஜக நிர்வாகிகள் செய்து இருக்கிறார்களாம். உதயநிதி அமைச்சர் ஆனதை மையப்படுத்தி 10 நிமிடங்கள் இதில் பேசி உள்ளனர் . 2024 தேர்தலில் இதை எப்படி திமுகவிற்கு எதிராக பயன்படுத்த வேண்டும் என்றும் ஆலோசனைகள் செய்யப்பட்டு இருக்கிறதாம்.
என்ன காரணம்?
ஆனால் உதயநிதி மட்டுமே இந்த மீட்டிங்கின் போகஸ் கிடையாது. பாஜகவில் கடுமையான உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. இதை பற்றியும் பேசி உள்ளனர். சீனியர்களுக்கும் - புதிய நிர்வாகிகளுக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. சமீபத்தில் பாஜகவில் நடக்கும் உட்கட்சி மோதல் குறித்து காயத்ரி ரகுராம் மௌனம் கலைத்தார். பாஜகவில் சீனியர்கள் மதிக்கப்படுவது இல்லை என்று காயத்ரி ரகுராம் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். சீனியர்களை பாஜகவில் மதிக்கவில்லை. தமிழக பாஜகவில் இருக்கும் சிலர் சீனியர்களுக்கு எதிராக டிரெண்டிங் செய்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களுக்கு எதிராக ஒரு வார் ரூமே இயங்கிக்கொண்டு இருக்கிறது. எங்களுக்கு எதிராக லைக் போட்டு செய்கின்றனர் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார் என்று கூறி இவரை பாஜக தலைவர் அண்ணாமலை சஸ்பெண்ட் செய்தார்.
காயத்ரி ரகுராம்
இன்னொரு பக்கம் பாஜகவில் திருச்சி சூர்யா - டெய்சி விவகாரம் பெரிய சர்ச்சையானது. இவர்கள் இருவருக்குமான ஆடியோ உரையாடல் பாஜகவில் புயலை கிளப்பியது. இந்த ஆடியோவில் கேசவ விநாயகம் பெயர் அடிபட்டது. பாஜகவின் பெண்கள் பதவி பெற பாலியல் ரீதியாக பயன்படுத்தப்படுகின்றனர் என்றும் புகார் வைக்கப்பட்டது. இதே புகார்தான் கேடி ராகவன் வீடியோ வந்த சமயத்திலும் வெளியானது. அதே விவகாரம் தற்போது திருச்சி சூர்யா விவகாரத்திலும் வெடித்துள்ளது. இந்த சர்ச்சை காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருச்சி சூர்யா தற்போது பாஜகவில் இருந்தும் வெளியேறி உள்ளார். எல் முருகன், கேசவ விநாயகம் ஆகியோர் அண்ணாமலையை வேலை செய்ய விடாமல் தடுக்கின்றனர் என்றும் திருச்சி சூர்யா புகார் வைத்து இருக்கிறார்.
என்ன நடந்தது?
இந்த நிலையில்தான் சீனியர் தலைவர்களை ஓரம்கட்டுவதற்காக அண்ணாமலையே இது போன்ற ஆடியோ, வீடியோக்களை வெளியிடுவதாகவும், அவர்தான் பாஜகவின் சீனியர்களுக்கு ஹனி டிராப் செய்வதாகவும் பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளன. இந்த நிலையில்தான் அண்ணாமலைக்கு இந்த கூட்டத்தில் முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. சீனியர்களை மதித்து செல்லுங்கள், சீனியர்களுடன் அனுசரையாக செல்லுங்கள் என்று அண்ணாமலைக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். மேலிட பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோரும் மீட்டிங்கில் கலந்து கொண்டனர். அதேபோல் தமிழ்நாடு முன்னாள் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அறிவுறை
இதில் தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசல் நிலவுகிறது. சமீபத்தில் கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் கூட வானதி சீனிவாசன் போராட்டம் செய்வோம் என்று சொல்ல.. அண்ணாமலை அதெல்லாம் செய்ய மாட்டோம் என்று மறுத்ததும் கூட அவருக்கும் வானதிக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாட்டை வெட்டவெளிச்சம் ஆக்கியது. இந்த தொடர் சம்பவங்கள் காரணமாக பாஜகவில் உட்கட்சி பூசல் வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது. தமிழ்நாடு பாஜக பெரிய வலிமையான கட்சியாக இல்லை என்றாலும், இதற்கு முன் இவ்வளவு சர்ச்சைகளில் சிக்கியதே இல்லை. ஆனால் அண்ணாமலை வந்த பின் பாஜக சர்ச்சை மேல் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. கட்சி மீது இணையத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்களே புகார் வைக்கும் நிலைமை ஏற்பட்டு உள்ளது. எனவே அண்ணாமலை சீனியர்களை மதிக்க வேண்டும். அதுதான் கட்சிக்கு நல்லது. இல்லையென்றால் பாஜகவிற்குத்தான் சிக்கல் என்று கூட்டத்தில் வெளிப்படையாக அவருக்கு சில சீனியர் நிர்வாகிகள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.