செங்கல்பட்டு - அரக்கோணம் இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு 933 கோடி ஒப்புதல்! பயணிகளுக்கு மாஸ் வசதிகள்
சென்னை: செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே 933 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய இரட்டை ரயில் பாதை அமைக்க மத்திய ரயில்வே வாரியம் அதிரடியாக ஒப்புதல் அளித்துள்ளது.. இந்த புதிய திட்டத்தின் மூலம் இந்த தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை 13-ல் இருந்து 40 ஆக அதிரடியாக உயர்த்தப்பட உள்ளது.. ஒற்றை ரயில் பாதையால் காஞ்சிபுரம், வாலாஜாபாத் உள்ளிட்ட நிலையங்களில் ரயில்கள் பல மணி நேரம் காத்திருக்கும் அவதிக்கு இனி நிரந்தர தீர்வு கிடைக்கப் போகிறது..!!
செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் இடையிலான மிக முக்கியமான ரெயில் போக்குவரத்து தடத்தில், நீண்ட நாட்களாக நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் மற்றும் காலதாமதத்திற்கு மிக விரைவில் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கப் போகிறது.. இந்த இரு நகரங்களுக்கும் இடையே தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் ஒற்றை ரெயில் பாதையை, இரட்டை வழிப் பாதையாக மாற்றுவதற்கு தெற்கு ரெயில்வே நிர்வாகம் தீவிரமான திட்டங்களை வகுத்து வந்தது.

ஆரம்பத்தில் இந்த மெகா திட்டத்திற்காக சுமார் 1,538 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு, அதற்கான ஆரம்பகட்ட பணிகள் துவங்கப்பட்டன.
செங்கல்பட்டு - அரக்கோணம்
இந்த திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்களைக் கேட்கும் கூட்டங்களும் நடத்தப்பட்டு, வெற்றிகரமாக முடிவடைந்தன.. இதனை தொடர்ந்து, திட்டப்பணிகளை அதிகாரப்பூர்வமாக துவங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டைக் கோரி, டெல்லியில் உள்ள மத்திய ரெயில்வே வாரியத்திற்கு விரிவான பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன..
இந்த சூழ்நிலையில் ஒட்டுமொத்த தமிழக ரெயில் பயணிகளும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தப் பிரம்மாண்ட திட்டத்திற்கு மத்திய ரெயில்வே நிர்வாகம் தற்போது இறுதி ஒப்புதலை வழங்கி அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.
அதிநவீன இரட்டை வழிப்பாதை
இந்த புதிய அறிவிப்பின்படி, அரக்கோணம் முதல் செங்கல்பட்டு வரையிலான 68 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த அதிநவீன இரட்டை வழிப்பாதை அமைக்கப்பட உள்ளது.. ரெயில்வே நிர்வாகத்தின் தற்போதைய மறுமதிப்பீட்டின்படி, சுமார் 933 கோடி ரூபாய் நிதியுதவியுடன் இந்த பிரம்மாண்டமான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.. இந்த நிதி ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, வட தமிழகப் பகுதி மக்களின் பல ஆண்டுகால கனவு நனவாகப் போகிறது என்பது உறுதியாகியுள்ளது..
இந்த இரட்டை ரெயில்வே பாதை முழுமையாக அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், இந்த பகுதியில் நிலவி வரும் ஒட்டுமொத்த போக்குவரத்து சூழலே முற்றிலும் தலைகீழாக மாறப்போகிறது.
ஆம், இதுவரை இந்த தடத்தில் தினசரி வெறும் 13 ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.. ஆனால், இந்த புதிய இரட்டைப் பாதை பயன்பாட்டிற்கு வந்த பிறகு, இந்த எண்ணிக்கையை 40 ரெயில்கள் வரை மிக எளிதாக விரிவுபடுத்த முடியும் என்று ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு ரயில்கள் - பொருளாதார வளர்ச்சி
இதன் மூலம், பொதுமக்களுக்கான பயணியர் ரெயில்கள் மட்டுமின்றி, தொழிற்சாலைகளுக்குத் தேவையான சரக்கு ரெயில்களையும் எவ்வித தடையுமின்றி கூடுதலாக இயக்க முடியும் என்பதால், வணிக ரீதியாகவும் இந்தத் திட்டம் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியைத் தேடித்தரக் கூடியதாக அமையும்.
இப்போது இந்த தடத்தில் ஒரே ஒரு ஒற்றை ரெயில் பாதை மட்டுமே இருப்பதால், பாலூர், வாலாஜாபாத் மற்றும் ஆன்மீக நகரான காஞ்சிபுரம் போன்ற முக்கிய ரெயில் நிலையங்களில், எதிரே வரும் மற்ற ரெயில்களுக்கு வழிவிடுவதற்காக பயணிகள் ரெயில்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது.. இதனால் வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்..
ஆனால் இந்த புதிய இரட்டைப் பாதை அமைக்கப்பட்டால், ரெயில்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் முற்றிலும் நீங்கி, தேவையற்ற காலதாமதம் முற்றிலுமாகக் குறையும் என்று நம்பப்படுகிறது.
பொன்னான வாய்ப்பு
அதுமட்டுமன்றி இந்த புதிய இரட்டை வழித்தடமானது மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க ரெயில் சேவைக்கும் வழிவகுக்கப் போகிறது. அரக்கோணம் முதல் செங்கல்பட்டு வரை, வழக்கம் போல் சென்னை கடற்கரை வழியாகச் சுற்றிச் செல்லாமல், தக்கோலம் வழியாக நேரடியாக செல்லும் ஒரு பிரத்யேக புறநகர் ரெயில் சேவையை இயக்குவதற்கு இந்த திட்டம் ஒரு பொன்னான வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறது.
அதாவது சென்னைக்கு செல்லாமல் குறுக்கு வழியில் பயணிக்கும் இந்த புதிய ரெயில் சேவை பயன்பாட்டிற்கு வந்தால், பயண நேரம் பல மணி நேரம் மிச்சமாகும்.. தெற்கு ரெயில்வே நிர்வாகத்தின் இந்த அதிரடி அறிவிப்பால், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் சுற்றியுள்ள பகுதி பொதுமக்கள் மற்றும் தினசரி பயணிகள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..
இந்தத் திட்டத்தால் பயணிகளுக்கு இன்னும் ஏராளமான கூடுதல் நன்மைகளும், அதிநவீன வசதிகளும் கிடைக்கப் போகிறது. இரட்டைப் பாதை பணிகளோடு சேர்த்து, இந்த தடத்தில் உள்ள அனைத்து முக்கிய ரெயில் நிலையங்களும் நவீனமயமாக்கப்பட்டு, புதிய நடைமேடைகள் மற்றும் பயணிகளுக்கான தங்கும் அறைகள் போன்ற மேம்பட்ட வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.
இரு வழிப்பாதையால் நன்மைகள், பயன்கள், வசதிகள்
குறிப்பாக, காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மற்றும் சிப்காட் வளாகங்கள் உள்ளதால், இந்த இரட்டைப் பாதை வழியாக சரக்கு போக்குவரத்து பல மடங்கு வேகமெடுக்கும் என்கிறார்கள் அதிகாரிகள்.. இதனால் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களைக் கொண்டு வருவதும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைத் துறைமுகங்களுக்குக் கொண்டு செல்வதும் மிக எளிதாகுமாம்.
அதுமட்டுமல்ல, தென் மாவட்டங்களில் இருந்து திருப்பதி போன்ற ஆன்மீகத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்களுக்கு இந்தத் தடம் ஒரு மிகச்சிறந்த மாற்றாக மாறும்.
சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு சென்று எஞ்சின் திசையை மாற்றி சுற்றுவழியில் செல்வதற்கு பதிலாக, தென் மாவட்ட ரெயில்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாக மிக விரைவாகத் திருப்பதி மற்றும் ஆந்திரா நோக்கி செல்ல முடியும்.. எதிர்காலத்தில் இந்த தடத்தில் கூடுதல் மின்சார ரெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்குவதற்கும், ரெயில்களின் வேகத்தை 110 கிலோ மீட்டர் வரை அதிகரிப்பதற்கும் இந்த புதிய இரட்டை வழிப்பாதை அடித்தளமாக அமையப் போகிறது..!!!












Click it and Unblock the Notifications