டேனியல் பாலாஜி இறப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பே நடந்த சம்பவம்.. கோவிலில் வலம் வரும் "உருவம்”.. அம்மா உருக்கம்
சென்னை: தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களால் தனக்கென தனி இடம் பிடித்த நடிகர் டேனியல் பாலாஜியின் திடீர் மறைவு ரசிகர்களை மட்டுமல்ல, முழு திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் முழுமையாக மீளாத நிலையில், தற்போது டேனியல் பாலாஜியின் தாயார் தனது மகனை பற்றி உருக்கமாக பகிர்ந்திருக்கும் விஷயங்கள் பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.

நடிகர் டேனியல் பாலாஜி
சமீபத்திய ஒரு பேட்டியில் டேனியல் பாலாஜியின் அம்மா பேசியபோது, மகனின் மறைவு பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். அதில், "என்னுடைய மகன் பாலாஜிக்கு அவர் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பே ஏதோ ஒரு உணர்வு இருந்தது போல. ஏற்கனவே அவன் சில விஷயங்களை முன்கூட்டியே கணித்து சொல்லக்கூடியவன். அதனால் தன்னுடைய இறப்பு வரப்போகிறது என்பதையும் அவன் உணர்ந்திருக்கலாம். ஆனால் நாங்க அதை அப்போது புரிந்துகொள்ளவில்லை" என்று கூறியிருக்கிறார்.
டேனியல் பாலாஜி அம்மா பேட்டி
அவர் தொடர்ந்து பேசும்போது, "வீட்டில் ஒரு விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அம்மாவுக்காக இதை செய்யணும் என்று என்னுடைய இன்னொரு மகன் பேசிக்கொண்டிருந்தான். அப்போது பாலாஜி, 'இனி அதை நான் செய்ய மாட்டேன்... தம்பிதான் பார்த்துக்குவான்... இனிமேல் எல்லா பொறுப்பும் அவனுக்குத்தான்' என்று சொன்னான். அப்போ கூட நாங்க அதை சாதாரணமாகத்தான் எடுத்துக்கொண்டோம். ஏன்னா அவனுக்கு இப்படி திடீரென்று ஏதாவது ஆகும் என்று கனவுல கூட நினைக்கல" என்று கண்கலங்கியுள்ளார்.
இதில் இன்னும் உருக்கமான விஷயம் என்னவென்றால், "இறப்பதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புகூட என்னுடைய மகளுக்கு போன் பண்ணி, 'அம்மாவுக்கு போன் ரீச் ஆகல... பூஜை விஷயமாக பேசணும்... எனக்கு போன் பண்ண சொல்லு' என்று சொல்லியிருக்கிறான். ஆனால் அதற்குள் எல்லாமே முடிஞ்சிடுச்சு" என்று கண்ணீருடன் கூறியிருக்கிறார்.
அதோடு நின்றுவிடாமல், மகன் மீதான தன் உணர்வுகளை வெளிப்படுத்திய அவர், "அவன் இறந்த பிறகும் பலர் கோவிலில் பூஜை நேரத்தில் அவன் உருவத்தை பார்த்ததாக சொல்றாங்க. என் கண்களுக்கும் பலமுறை அவன் தெரிந்திருக்கான். அவனுடைய ஆசை, கனவு எல்லாமே அந்த கோவில்தான். கோவிலின் மூலஸ்தானம் பக்கத்தில அவனை நாங்க உணர்ற மாதிரி இருக்கு. அவன் உயிரே அந்த கோவிலை சுற்றிக்கிட்டே இருக்கு" என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.
நடிகர் டேனியல் பாலாஜி கேரக்டர்
டேனியல் பாலாஜியின் குணம் பற்றி அம்மா பேசும்போது, "அவருக்கு சின்ன வயசிலிருந்தே தான தர்மம் செய்யும் பழக்கம். அவரிடம் இரண்டு டிரஸ் இருந்தால்கூட ஒன்றை வேறொருவருக்கு கொடுத்துவிடுவான். 'ஏன் இப்படி கொடுக்குற?' என்று கேட்டால், 'அவங்களுக்கு இதுகூட இல்லையம்மா' என்று சொல்வான். அப்படிப்பட்டவன் இப்போ இல்ல என்பது தான் எனக்கு பெரிய வலி" என்று கண்ணீருடன் பேசியிருக்கிறார்.

நிஜத்தில் ஹீரோ
டேனியல் பாலாஜி யார் என்றால், தமிழ் சினிமாவில் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரங்களுக்கு பெயர் பெற்றவர். வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்த அமுதன் கதாபாத்திரம் இன்னும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று. அதேபோல் பொல்லாதவன், வடசென்னை, பிகில் உள்ளிட்ட பல படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்தவர். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாள மொழி படங்களிலும் நடித்திருந்தார்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு சின்னத்திரையிலும் நடித்தவர். சித்தி சீரியலில் நடித்த கதாபாத்திரத்தின் பெயரே பின்னர் அவருக்கு அடையாளமாக மாறி "டேனியல் பாலாஜி" ஆனது.
டேனியல் பாலாஜி மறைவு
கடந்த 2024 மார்ச் 29ஆம் தேதி இரவு, மாரடைப்பு காரணமாக டேனியல் பாலாஜி திடீரென உயிரிழந்தார். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்ற தகவல் அப்போது வெளியானது. வெறும் 48 வயதிலேயே அவரது மறைவு திரையுலகிற்கு பெரிய இழப்பாக பார்க்கப்பட்டது.
இப்போது அவரது தாயார் பேசியிருக்கும் இந்த உருக்கமான விஷயங்கள், டேனியல் பாலாஜி ஒரு நடிகர் மட்டுமல்ல, நல்ல மனம் கொண்ட மனிதர் என்பதையும் மீண்டும் நினைவுபடுத்தி இருக்கிறது. ரசிகர்களும் இந்த பேட்டியை பார்த்து, "இப்படி நல்ல மனிதர்கள் சீக்கிரமே போய்விடுகிறார்கள்" என்று வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.













Click it and Unblock the Notifications