விஜய் அமைச்சரவையில் இடம்பெறும் 2 காங்கிரஸ் அமைச்சர்கள் யார் யார்? இறுதி செய்தது மேலிடம்!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில், புதிய அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான இடப்பங்கீடு குறித்த தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. தவெக அமைச்சரவையில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 2 இடங்களுக்கான பெயர்களை காங்கிரஸ் தலைமை இறுதி செய்துள்ளது.
இந்த இரண்டு அமைச்சர் பொறுப்புகளுக்கு, காங்கிரஸின் மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரின் பெயர்கள் தவெக தலைமைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறிவாலய மற்றும் சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் அமைச்சரவை
தவெக வெற்றி பெற்ற நிலையில் விஜய் தலைமையில் பதவியேற்றுள்ள புதிய அரசில் அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கட ரமணன், சிடிஆர்.நிர்மல்குமார், ராஜ் மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேர் அமைச்சர்களாகி உள்ளனர்.
விஜய் அமைச்சரவையில், தவெக-வை சேர்ந்த மேலும் சிலருக்கும், காங்கிரஸ் மற்றும் அதிருப்தி அதிமுகவை சேர்ந்த சிலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. தவெக ஆட்சி அமைக்க முதல் கட்சியாக ஆதரவு அளித்த காங்கிரஸ் கட்சிக்கு கேபினட்டில் 2 இடங்களை வழங்க விஜய் முடிவு செய்துள்ளாராம். 2 பேரின் பரிந்துரை பட்டியலை காங்கிரஸ் கட்சி, விஜய்யிடம் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் சார்பில் அமைச்சரவையில் இடம்பெறவிருக்கும் 2 பேர்
எஸ். ராஜேஷ்குமார் (கிள்ளியூர் தொகுதி): கன்னியாகுமரி மாவட்டத்தின் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தொடர்ந்து தேர்ந்தெடுத்து வரப்படும் மூத்த அரசியல்வாதியான ராஜேஷ்குமார், அடிமட்டத் தொண்டராக இருந்து உயர்ந்தவர். தென் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் வலுவான அடித்தளத்தை பிரதிபலிக்கும் வகையில் இவரது பெயர் முதன்மையாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
விஸ்வநாதன் (மேலூர் தொகுதி): மதுரை மாவட்டத்தின் மேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஸ்வநாதன், கட்சியின் நம்பிக்கைக்குரிய முகங்களில் ஒருவராகப் பார்க்கப்படுகிறார். தென் மாவட்டங்களில் கட்சியின் செல்வாக்கை நிலைநிறுத்தவும், சமூகச் சமநிலையைப் பேணவும் இவரது பெயர் அமைச்சரவைப் பரிந்துரைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை ஒதுக்கீட்டின் பின்னணி
தேர்தல் களத்தில் தவெக பெற்ற பெரும் வெற்றியைத் தொடர்ந்து, கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தோழமைக் கட்சிகளையும் ஆட்சியில் பங்குதாரர்களாக இணைத்துக் கொள்ள முதலமைச்சர் விஜய் முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தல் முடிந்ததுமே, தவெக-வோடு கூட்டணியை அறிவித்த காங்கிரஸுக்கு, அமைச்சரவையில் தகுந்த பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் தலைமை முன்வைத்திருந்தது. இதனை ஏற்று, தற்போது 2 முக்கிய இடங்கள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு, அதற்கான இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
அரசியல் முக்கியத்துவம்
கூட்டணி பலம்: இந்த நகர்வின் மூலம் தவெக மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணி உறவு மேலும் பலப்படும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த சில ஆண்டுகளாக கூட்டணி ஆட்சிக்கான கோரிக்கைகள் வலுத்து வந்தாலும், அது நடைமுறைக்கு வராமலேயே இருந்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வந்துள்ளது.
தென் தமிழகத்திற்கு முக்கியத்துவம்: பரிந்துரைக்கப்பட்டுள்ள இரண்டு எம்.எல்.ஏ-க்களும் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், புதிய அமைச்சரவையில் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்குக் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இந்த இரண்டு புதிய அமைச்சர்களின் பொறுப்பேற்பு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications