பனையூரில் உள்ள அன்புமணி வீட்டுக்கு வந்த தாயார் சரஸ்வதி.. சமாதான முயற்சியா? பரபரப்பில் பாமக
சென்னை: பாமகவில் தந்தை மகன் மோதல் உச்சத்தை தொட்டிருக்கும் சூழலில், சென்னை நீலாங்கரை பனையூரில் உள்ள அன்புமணியின் இல்லத்திற்கு தாய் சரஸ்வதி வருகை தந்துள்ளார். அப்போது அன்புமணியும், அவரது மனைவி சவுமியாவும் சரஸ்வதியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தைலாபுரம் இல்லத்தில் தந்தை ராமதாஸ் இல்லாத நேரத்தில் தாய் சரஸ்வதியை அன்புமணி சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாமகவில் தந்தை மகன் மோதல் உச்சம் தொட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தது பாமக. தற்போது சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதன்படி பாஜகவும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது.

மேலும் திமுகவை வீழ்த்த பாஜக வியூகம் வகித்து வருகிறது. அதன்படி தான் பாமகவையும் அதிமுக பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இதற்கு ராமதாஸ் ஒப்புதல் தரவில்லை என கூறப்படுகிறது. ஆனால் மகன் அன்புமணி பாஜகவுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்ததாக தெரிகிறது.
இந்த விவகாரம் உள்பட பல்வேறு விஷயங்களில் தந்தை மகன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து, செயல் தலைவர் ஆக பதவி இறக்கம் செய்தார் ராமதாஸ். தொடர்ந்து அன்புமணியால் எனக்கு மன வருத்தம் தான் வருகிறது என்று ராமதாஸ் கூறினார்.
பாஜகவுடன் கூட்டணி வைக்க என் காலில் விழுந்தார் எனவும் அவர் மீது குற்றச்சாட்டு வைத்தார். ஆனால் இதற்கு அன்புமணி எந்தவித கருத்துக்களையும் கூறாமலே இருந்து வந்தார். மேலும், டெல்லி சென்ற அன்புமணி ராமதாஸ் கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் நான்தான் எனவே எனக்குத் தான் நிர்வாகிகளை நீக்கும் மற்றும் சேர்க்கும் அதிகாரம் இருக்கிறது என தேர்தல் ஆணையத்தில் முறையிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தான் அன்புமணியின் பதவிக்காலம் முடிந்ததாகவும், நானே இனி கட்சி தலைவராக தொடர்கிறேன் என்று ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். மேலும் என் பெயரை பயன்படுத்தக் கூடாது. இன்ஷியலை மட்டும் வேண்டுமானால் பயன்படுத்திகொள்ளலாம் என கூறியதால், பாமகவில் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து தான் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பாமக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராமதாஸ் காரைக்கால் புறப்பட்டு சென்றிருந்த போது, அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் இல்லத்துக்கு வருகை புரிந்தார். தனது தாய் சரஸ்வதியை பார்ப்பதற்காக தைலாபுரம் வந்ததாக கூறப்பட்டது. இதன்பின்னர் மோதல் முடிவுக்கு வரும் என தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையில் அப்படி ஏதும் நிகழவில்லை.
இந்த நிலையில் தான் இன்று சென்னை பனையூரில் உள்ள அன்புமணியின் வீட்டிற்கு தாயார் சரஸ்வதி வருகைபுரிந்துள்ளார். அப்போது அவர்களை வரவேற்ற அன்புமணி, தாயிடம் ஆசிர்வாதம் வாங்கினார். சரஸ்வதியிடம் அன்புமணி மற்றும் அவரது மனைவி காலில் விழுந்து ஆசிவாதம் வாங்கினர். தாயின் சந்திப்பு பிறகு தந்தை மகன் இருவரும் ஒன்று சேர்வார்களா என்று பாமக தொண்டர்கள் எதிர்பார்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications